Tuesday, August 2, 2011

பெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 6

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர்நடைப் பருவம்)
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 6

ஒருகாலில்சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த*
இருகாலும் கொண்டு அங்கங்கு எழுதினாற்போல் இலச்சினைபட நடந்து*
பெருகா நின்ற இன்பவெள்ளத்தின்மேல் பின்னையும் பெய்து பெய்து*
கருகார்க்கடல் வண்ணன் காமர்தாதை தளர்நடைநடவானோ.

பொருள்:

ஒருகாலில்சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த - ஒரு காலில் திருசங்கு இலச்சினையும், ஒரு காலில் திருசக்கர இலச்சினையும் பொறித்தவண்ணம் அமைந்துள்ள திருவடிப் பாதங்கள்

இருகாலும் கொண்டு அங்கங்கு எழுதினாற்போல் இலச்சினைபட நடந்து- பாதங்களில் திருசங்குசக்கர இலச்சினைகளைப் பொறித்த அழகிய கால்களைக் கொண்டு அடுத்தடுத்து அடி வைக்கும் வேளையில், பாதங்களிலுள்ள திருசங்குசக்கர ரேகைகள், அச்சுவார்தததைப் போல் உன் பாதம் படும் இடங்களில் எல்லாம் பதியும் வண்ணம் நடந்து

பெருகா நின்ற இன்பவெள்ளத்தின்மேல் பின்னையும் பெய்து பெய்து - ஆனந்தப் பெருவெள்ளம் என் மனதில் ததும்ப ததும்ப நிற்கின்ற போதும், திருசங்குசக்கர ரேகைகள் பூமியெங்கும் அச்சுவார்த்தார்போல் நீ பாதங்களைப் பதித்து நடந்து என்னுள் மென்மேலும் இன்பவெள்ளம் ஊற்றெடுக்கச் செய்யும் வண்ணம்

கருகார்க்கடல் வண்ணன் காமர்தாதை தளர்நடைநடவானோ- ஆழ்ந்த கருநிறமுடைய குளிர்ந்த நீரையுடைய பேராழியின் வண்ணதேகமுடையவனே, காமதேவனின் தாதையே தளர்நடை நடவாயோ!

பதவுரை:

குளிர்ந்த நீரையுடைய, அடர்கருநிறங்கொண்ட பெருங்கடலின் வண்ணம் ஒத்த தேகமுடையவனே! மன்மதனின் தந்தையே! உன்னைப் பெற்று, உன் லீலைகள் பலவற்றைக் கண்ணாற கண்டதில் இன்பப் பெருவெள்ளம் என்னுள் ததும்பி ததும்பி நிறைந்துள்ளது. அதில் மென்மேலும் ஆனந்தப்பெருவெள்ளம் ஊற்றெடுக்க, உன் ஒரு காலில் திருசங்கு இலச்சினையும், மற்றொரு காலில் திருசக்கர இலச்சினையும் உள்ளவாறு பொறித்தமைந்த மலர்ப்பாதங்கள் படும் இடங்களில் எல்லாம் அச்சுப் பொறித்தாற் போல் பூமியெங்கும் அத்திருசங்குசக்கர முத்திரைகள் பதியுமாறு தளர்நடை நடவாயோ!

No comments: