Sunday, July 24, 2011

பெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 3

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர்நடைப் பருவம்)
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 3

மின்னுக்கொடியும் ஓர்வெண்திங்களும் சூழ்பரிவேடமுமாய்*
பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடையொடும்*
மின்னில் பொலிந்ததோர் கார்முகில்போலக் கழுத்தினில்காறையொடும்*
தன்னில் பொலிந்த இருடீகேசன் தளர்நடைநடவானோ.

பொருள்:

மின்னுக்கொடியும் ஓர் வெண்திங்களும் சூழ் பரிவேடமுமாய் - கொடி மின்னல், பொன்னிற மின்னுகின்ற மின்னல் கீற்றும், முழுமையான குளிர் வெண்ணிலவும், அந்நிலவினைச் சூழ்ந்திருக்கின்ற பரிவேடமும் ஆகிய இம்மூன்றும் இணைந்திருக்கின்ற வானத்தைக் கற்பனை செய்து பாருங்கள்...

பரிவேடம் ன்னா, பரி ன்னா குதிரை- அப்ப குதிரைக்கு ஏதோ மாறுவேடப்போட்டி வெச்சிருக்காங்கன்னோ, இல்ல, குதிரை வேடமிட்ட மனிதன்னோ நினைச்சுடாதீங்க... இது ஒரு வானியல், ஒளியியல் தொடர்புடைய வார்த்தை.

சூரியனைச் சுற்றியோ, சந்திரனைச் சுற்றியோ ஒரு ஒளிவட்டம் தெரியும். கவனிச்சுருக்கீங்களா?

அதாவது, இரவு நேரத்தில் சந்திரனைச் சுற்றி இருக்கிற மேகங்கள், நல்லா நீரைக் குடிச்சுட்டு, பனிப்படிகங்கள் மாதிரி உறைஞ்சி இருக்கிற போது, அந்த படிகங்கள் எல்லாம் ஒரு முப்பட்டகத்தைப் போல செயல்பட்டு, அதன் மேல் படுகின்ற சந்திரனின் ஒளியைச் சிதறலடிக்கின்றன. அவை சந்திரனைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் போல் தோன்றுமே அதுதான் பரிவேடம்.

so, இப்ப நீங்களே புரிஞ்சுக்குவீங்க... சில்லென்று குளுமையாக மழை பெய்து ஓய்ந்த இரவு வானம்! ஏற்கெனவே இரவில் வானம் கருப்பா இருக்கும்; இதில் கார்மேகமும் படர்ந்திருக்கு... 1.கருநிறவானம்.

2.பொன்வண்ண மின்னல் கீற்று.
3.பௌர்ணமி நாளின் பால் வெண்ணிலவு.
4.நிலவினைச் சுற்றிலும் பரிவேடம்.


பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடையொடும் - பின்னல், துலங்கும் அரசிலை, பீதகச் சிற்றாடை- இடையில் மின்னும் பொன்னாலான அரைஞாண்கயிறு, அதில் கோர்க்கப்பட்ட மிகுந்த பொலிவுடைய தூய வெள்ளியால் செய்த அரசமரத்தின் இலை வடிவிலான ஆபரணம், இடுப்பில் கட்டியுள்ள பட்டுப்பீதாம்பரம் ஆகிய இம்மூன்றனுடன் இணைந்த...

மின்னில் பொலிந்தது ஓர் கார்முகில் போலக் கழுத்தினில் காறையொடும் - மின்னல் ஒளியினால் பொலிவு பெறும் மழைமேகம் போலக், கழுத்தில் அணிந்துள்ள காறை என்னும் அணிகலனுடனும்

தன்னில் பொலிந்த இருடீகேசன் தளர்நடை நடவானோ - தனக்கே உரித்தான தன் திருமேனிப் பொலிவுடன், இவ்வாடை, ஆபரணங்களின் பொலிவும் ஒன்றுகூட இருடீகேசா(ரிஷிகேசா) தளர்நடை நடந்துவா என் அப்பனே.

முந்தைய பாடலில் கண்ணனின் திருவாயினை வர்ணித்துப் பாடினார், பெரியாழ்வார். இந்தப் பாடலில் அவரின் ஆடை ஆபரணங்களை வர்ணித்துள்ளார்.

கார்மேகம் - கண்ணன் திருமேனி
மின்னல் - இடையிலுள்ள பொன் அரைஞாண்கயிறு, கழுத்திலுள்ள காறை
வெண்திங்கள் - அரசிலை
பரிவேடம் - பீதகவாடை

பதவுரை:

எங்கள் இறைவனே! இருடீகேசா! பொன்னொளி வீசும் மின்னல் கொடி, முழு வெண்ணிலவு, நிலவினைச் சூழ்ந்துள்ள பரிவேடம் ஆகியவற்றைப் போல பொன் அரைஞாண்கயிறு, வெள்ளியினாலான அரசிலை, இடையில் உடுத்திய பொன்னில் தோய்ந்த பட்டாடை ஆகியவற்றுடன், மின்னல் ஒளியினால் பொலிவுறும் கார்முகிலைப் போல கழுத்தினில் அணிந்துள்ள காறையோடும் சேர்ந்து, உனக்கே உரித்தான உன் திருமேனிப் பொலிவுடன் தளர்நடை நடந்து வாராயோ!

7 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அழகான ஓவியப் பாசுரம்! தேர்ந்த உவமைகள்! நன்று!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பரிவேடம் = Whatz the English Name?

கழுத்தில் அணிந்துள்ள காறை என்னும் அணிகலனுடனும் = சுவற்றில் காரை பெயர்ந்து விழுகிறது-ன்னு கேள்விப்பட்டிருக்கேன்! இது என்ன காறை?

In Love With Krishna said...

@KRS:
//பரிவேடம் = Whatz the English Name?//
When it is exactly like Periazhwar describes, it is called "Moon Halo".

In Love With Krishna said...

தமிழ்: Neenga eppa dhaan pudhu post poduveenga-nnu kaathukittu iruppen!
Thanks for posting! :)
Eppa Periazhwar-ai paarthaalum, unga blog-la padicha paasurangal dhaan manadhil varum :)

நாடி நாடி நரசிங்கா! said...

மிக்க நன்றி :)

குமரன் (Kumaran) said...

அருமையான வருணனை. பொருளும் நன்கு விரித்துச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

தமிழ் said...

வருகை தந்த அனைவருக்கும் மிக்க நன்றி!