Thursday, September 16, 2010

பெரியாழ்வார் திருமொழி 1 - 6 - 1

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
ஆறாம் திருமொழி - மாணிக்கக் கிண்கிணி

சப்பாணிப் பருவம் - கைக்கொட்டி ஆடும் பருவம்

(வெண்டளையால் வந்த கலித்தாழிசை)

பாடல் 1

மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப மருங்கின்மேல்*

ஆணிப்பொன் னால்செய்த ஆய்பொன்னுடைமணி*

பேணிப் பவளவாய் முத்திலங்க* பண்டு

காணிகொண்ட கைகளால் சப்பாணி கருங்குழற் குட்டனே! சப்பாணி.

பொருள்:

மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப மருங்கின்மேல் -
சிவந்த மாணிக்கக் கல் பொருத்திய கிண்கிணி இனிய ஒலி எழுப்ப இடுப்பின் மேல்

கிண்கிணிக்கு இங்க பாருங்க
ஆர்ப்ப - ஒலி எழுப்ப
மருங்கு - இடுப்பு

ஆணிப்பொன் னால்செய்த ஆய்பொன் உடைமணி - சிறந்த பொன்னால் ஆன அரைஞான் கயிற்றில் ஆய்ந்து எடுத்த பொன்மணிகள் அணிந்தவனே
இப்படி இடுப்புல அணியும் அணிகலனுக்கு ஒரு தனிப் பெயர் இருக்கு. கண்டுபிடிங்க ;-)
ஆணிப்பொன் - பொன் வகைகளில் சிறந்தது.
ஆய்பொன்உடைமணி - ஆராய்ந்து தேர்ந்த பொன்னாலான மணி

பேணிப் பவளவாய் முத்திலங்க பண்டு - பவளம் போல் சிவந்த வாயில் முத்தொத்த பற்கள் விளங்க, முன்பு

காணி கொண்ட கைகளால் சப்பாணி கருங்குழற் குட்டனே சப்பாணி -(மாவலியிடமிருந்து)நிலத்தை இரந்து பெற்ற கைகளால் சப்பாணி கொட்டேன்! கரிய குழல்களைக் கொண்ட பிள்ளையே சப்பாணி கொட்டு!!

பதவுரை/விளக்கவுரை:

சப்பாணின்னா கைகளைக் கொட்டி விளையாடுவது. பிள்ளைய சப்பாணி கொட்டக் கூப்பிடணும். வெறும் கைகளால் கொட்டுன்னு கூப்பிட்டா குழந்தை கொட்டுமா? கைகளின் சிறப்புகளைத் தேடுறாரு. ஆககாகா, இந்தக் கைகளால தானே முன்னாடி மாவலி அரசன்ட்ட இருந்து இந்த நிலம் முழுதும் வேணும்னு இரந்து வாங்குனான்னுட்டு பிள்ளையக் கூப்பிட்டுத் தூக்குறாரு. கூடவே வேறு சில ஒலிகளும் கவனத்தை ஈர்க்குது. என்னது? தூக்குன பிள்ளை காலை உதைக்குது. இடுப்பை ஆட்டுது. சப்பாணி கொட்டலை. கெஞ்சுறாரு பெரியாழ்வார். மாணிக்கம் பொருத்திய கிண்கிணிகள் ஒலி எழுப்புது, இடுப்பில் மாட்டிய ஆணிப்பொன் கயிற்றில் அமைந்த தேர்ந்த பொன் மணிகளும் இசை எழுப்புது. முன்பொருநாள் மாவலி மன்னனிடம் இந்தத் தரை முழுதும் வேண்டிப் பெற்ற கைகளால் எனக்காக சப்பாணி கொட்டுன்னு கேட்கிறார். உடனே பிள்ளையும் சப்பாணி கொட்டுது. பெரியாழ்வாருக்கு நிறையலை. அப்பனே, உன் சிவந்த இதழ் விரிந்து முத்துப் பற்கள் தெரியும் படி சிரிப்பியே! அப்படியே உன் கருங்குழல்கள் (பிள்ளைக்கு இன்னும் தலை மொட்டை அடிக்கலை;-) அசைய தலையாட்டி சப்பாணி கொட்டுங்கிறாரு!! கொட்டுனானே!!!