Sunday, October 25, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 9

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல் கலித்தாழிசை பாடல் 9 மெய்திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும் செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும் வெய்ய கலைப்பாகி கொண்டுஉவ ளாய்நின்றாள் ஐயா அழேல் அழேல் தாலேலோ அரங்கத் தனையானே தாலேலோ
பொருள்:
மெய்திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும் - உடலிலிருந்து வெளிப்படும் நறுமணத்துக்காக நாற்றப் பொடியும், மஞ்சளும் நல்லா கவனிங்க கண்ணனுக்கு இயற்கை மணம் இல்லை ;-) அறிவியல் படி பாத்தா உண்டு ;-))) ஒருவேளை பெரிய ஆளானாத் தான் உடல்மணம் உண்டாகுமோ! நானப்பொடி - நறுமணப் பொடி (ச்)நானப் பொடின்னு வைச்சுக்குங்க. குளிக்கும் போது கண்ணனுக்கு நறுமணப் பொடியும், மஞ்சளும் பூசிக் குளிப்பாட்டுறாங்க. அதுனால உடலிலிருந்து அந்தப் பொடிகளின் மணம் கமழ்கிறது. செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும் - அழகான பெரிய கண்களுக்குத் தடவ மையும், நெற்றியில் சிவப்பு வண்ணமிட்டு செய்ய - அழகான அஞ்சனம் - மை குளிச்ச பிள்ளைக்கு கண்ணுக்கு மை தடவி, சிந்துரமும் இடுகிறார்கள் . கன்னத்துல ஒரு பொட்டு வைப்பாங்களே, அது வழக்கம் இல்லையோ?? வெய்ய கலைப்பாகி கொண்டுஉவ ளாய்நின்றாள் - விரையும் மானில் ஏறி வரும் காளி உனக்குத் துணையாக நின்றாள். வெய்ய - விரைந்து கலைப்பாகி - கலைமானின் பாகி (பாகனுக்குப் பெண்பால்) ஐயா அழேல் அழேல் தாலேலோ அரங்கத் தனையானே தாலேலோ - அரங்கத்தில் பள்ளி கொண்ட தலைவனே அழாது கண்ணுறங்கு ஒரு சின்ன இலக்கணக் குறிப்பு எதுகைனா அடியின் இரண்டாவது எழுத்து ஒன்றி வருதல். அதோட முதல் எழுத்து குறில்னா எல்லா அடிகள்லயும் முதல் எழுத்து குறில் தான் வரணும். மாறி வந்தாத் தவறு. மெய், செய்ய, வெய்ய வந்துருக்க எதுகைக்கு ஐயா எப்படிப் பொருந்தும்? இங்க தான் ஐகாரக் குறுக்கம் வருது. ஐ நெடிலாக ஒலிக்காம அய்யான்னு குறுகி ஒலிக்கும். அதனால எதுகை வந்துருச்சே!! பதவுரை: உன் நறுமணக் குளியலுக்கு நாற்றப் பொடியும், மஞ்சளும் செய்து, குளித்த பின் பெரிய கருவிழிகளில் பூச மையும், நெற்றியில் இட சிந்துரமும் விரையும் கலைமானை ஊர்தியாகக் கொண்ட காளி (அ) துர்க்கை உனக்குத் துணையாக இருக்கின்றாள் அரங்கத்தில் பள்ளி கொண்ட அய்யனே அழாது கண்ணுறங்கு

1 comment:

குமரன் (Kumaran) said...

ஸ்நானப் பொடி தான் நானப் பொடியா? சரி தான். மெய்யெழுத்து சொல்லுக்கு முதலெழுத்தாக வரக்கூடாது என்பதால் அப்படி சொல்லிவிட்டார் போலும் ஆழ்வார்.

அரங்கத்தணையானேன்னு தான் வரும்ன்னு நினைக்கிறேன்.னவா ணவான்னு கொஞ்சம் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

இலக்கணக் குறிப்புக்கு நன்றி.