Monday, September 7, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 16

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 16

விண்கொள் அமரர்கள் வேதனைதீர*முன்
மண்கொள் வசுதேவர்தம் மகனாய்வந்து*
திண்கொள் அசுரரைத் தேயவளர்கின்றான்*
கண்கள் இருந்தவாகாணீரே கனவளையீர்! வந்துகாணீரே.



பொருள்:


விண்கொள் அமரர்கள் வேதனைத் தீர -
விண்ணுலகத்தில் வாழ்கின்ற தேவர், தேவிகளுக்கு அசுரர்களால் விளைவிக்கப்படும் துன்பங்களை எல்லாம் தீர்ப்பதற்காக

முன் மண்கொள் வசுதேவர்தம் மகனாய்வந்து -
மண்ணுலகத்தில், வசுதேவர் என்பவருக்கு மகனாகப் பிறந்து

திண்கொள் அசுரரைத் தேய வளர்கின்றான் -
திண்மையானத் தோள்களை உடைய அசுரனான கம்சனை அழிப்பதற்காக ஆயர்பாடியில் வளர்கின்றவனுடைய

கண்கள் இருந்தவா காணீரே கனவளையீர்! வந்துகாணீரே -
வசுதேவருடைய மகனாகப் பிறந்து, ஆயர்பாடியில் வளர்கின்ற கண்ணனின் கண்ணழகைப் பாருங்கள். நெருக்கமாய் வளையல் அணிந்துள்ள பெண்களே, வந்து அசுரனை அழிப்பதற்காக வளர்கின்ற இந்த பிள்ளையின் கண்கள் எத்துனை அழகாய் இருக்கின்றதென்பதை வந்து பாருங்கள்.

பதவுரை:

விண்ணுலகத்தில் வாழ்கின்ற தேவர்களின் துன்பங்களை எல்லாம் தீர்ப்பதற்காக, மண்ணுலகில் வசுதேவருக்கு மகனாகப் பிறந்து, திண்மையானத் தோள்களை உடைய அசுரனான கம்சனை அழிப்பதற்காக ஆயர்பாடியில் வளர்கின்றவனுடைய கண்களைப் பாருங்கள். நெருக்கமாய் வளையல் அணிந்துள்ள பெண்களே, தேவர்களுக்கும் அடியவர்களுக்கும் கருணைபுரியும் அதே கண்கள், கம்சன் போன்ற அசுரர்களுக்கு கனலாய் தகிக்கின்ற இருபார்வையும் ஒன்றாய்க் கொண்டுள்ள உத்தமனின் கண்ணழகை வந்து பாருங்கள்.

5 comments:

Raghav said...

//கண்கள் இருந்தவா காணீரே//

ஆம்.. அரங்கனின் பெரியவாய செவ்வரியோடிய அக்கண்களே என் நினைவுக்கு வருகிறது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//முன் மண்கொள் வசுதேவர்தம் மகனாய்வந்து//

அது என்ன "முன் மண் கொள்"?
குழந்தை இப்போது பிறந்ததாகப் பாடும் ஆழ்வார், "முன்" என்று ஏன் சொல்லணும்? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//திண்கொள் அசுரரைத் தேய வளர்கின்றான்//

ரொம்ப அருமையான சொற்றொடர் - தேய வளர்கின்றான்! என்ன அழகான முரண் தொடை!

தேய்தலும் வளர்தலும் நிலவுக்கு இயற்கை!
அசுரரை அழித்தான்-ன்னு சொல்லாது "தேய" என்கிறார்!

ஏன்னா பிரகலாதனும் அசுரன் தான்! வீடணனும் அசுரன் தான்! மாவலியும் அசுரன் தான்! ஆனால் யாரும் பிரகலாதாசுரன்-ன்னு சொல்றது இல்லை! பிரகலாதாழ்வான் என்று தான் சொல்லுவார்கள்!

இந்திரனின் மகன் ஜெயந்தன்! காகமாய் வந்து சீதையைக் கொத்திக் களங்கப்பட்டான்! அவன் தேவனே ஆனாலும், அவனைக் காகாசுரன் என்று தான் சொல்கிறார்கள்!

எம்பெருமானுக்கு தேவாசுர பேதங்கள் கிடையாது! அவன் கண்ணாடி போல! எதுவாக இருக்கோமோ, அதுவாகவே தெரிவான்!

அதான் ஒட்டு மொத்தமாய் அசுர குலத்தை "அழித்தான்" என்று சொல்லாது, "தேய" என்கிறார்!

அல்லவை தேய அறம் பெருகும் - நல்லவை
நாடி இனிய சொலின்!

தமிழ் said...

Raghav said...

//கண்கள் இருந்தவா காணீரே//

ஆம்.. அரங்கனின் பெரியவாய செவ்வரியோடிய அக்கண்களே என் நினைவுக்கு வருகிறது.//

வாங்க இராகவ்!

ஒரே ஒரு தடவைத்தான் அரங்கனப்பார்க்கப் போனேன்... ஒரு வினாடி கூடப் பார்க்கவே விடல... ;-((

தமிழ் said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//முன் மண்கொள் வசுதேவர்தம் மகனாய்வந்து//

அது என்ன "முன் மண் கொள்"?
குழந்தை இப்போது பிறந்ததாகப் பாடும் ஆழ்வார், "முன்" என்று ஏன் சொல்லணும்? :)//

முன் - முதலில் வசுதேவர்க்கு மகனாக வந்து பிறகுதானே யசோதை அன்னையிடம் வந்து சேர்ந்தனன்..