Sunday, July 26, 2009

திருப்பல்லாண்டு அடிவரவு

திருப்பல்லாண்டு அடிவரவு:

திருப்பல்லாண்டின் பன்னிரு பாடல்களையும் வரிசைக்கிரமமாக நினைவில் கொள்ள பின்வரும் வரிசையை நினைவில் கொண்டாலே எளிமையாக இருக்கும்!!

பல் அடி வாழ் ஏடு அண்டம்
எந்தை தீ நெய் உடுத்து - எந்நாள்
அல்வழக்கு பல்லாண்டு வண்ணம்!!

திருப்பல்லாண்டில் 12 பாடல்கள் தானே இங்கு 13 சீர்கள் இருக்கின்றனவே என்று கேட்டால், இறுதி சீரான வண்ணம் என்பது அடுத்துத் தொடரும் பெரியாழ்வார் திருமொழியின் முதற்பத்தில், முதல் திருமொழியில் வரும் முதற்சீராகும்.

வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் என்பது தான் அடுத்து நாம் பார்க்கப் போகும் பாடல்....

இந்த திருப்பல்லாண்டில், ஒருசில இடங்களில் பெரியாழ்வார் பல்லாண்டு கூறுவனே என்று தன்மை ஒருமையிலும், கூறுதும் என்று கூறுவோம் என்னும் பொருள் வருமாறு தன்மை பன்மையிலும், கூறுமின் அதாவது கூறுங்கள் என்று முன்னிலை பன்மையிலும் குறிப்பிட்டிருக்கிறார். அவை எங்கு எங்கு எவ்வாறு வந்திருக்கின்றன என்பதை எளிதில் நினைவு கொள்ள ஒரு எளிய வழி!

ஆதி கூறுதும், அநந்தரம் கூறுமின்
அண்டம் என்மின், எந்தை பாடுதும்
தீஉடுத்து எந்நாள் கூறுதும்,
நெய்யும் அல்லும் கூறுவனே!

ஆதி என்பது, இங்கு மூன்றாம் பாசுரத்தைக் குறிக்கிறது.
வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல்... ...கூறுதுமே;

அநந்தரம் ன்னா அடுத்தது என்று அர்த்தம். அதாவது நான்காம் பாசுரத்தைக் குறிக்கிறது.
ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம் வந்து... ...கூறுமினே;

அண்டக்குலத்துக் கதிபதியாகி... ..... என்மினே;

எந்தை தந்தை ....... ....... பாடுதும்;

தீயிற் பொலிகின்ற,
உடுத்துக் களைந்த நின் பீதகவாடை,
எந்நாள் எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுதப்பட்ட
ஆகிய மூன்று பாசுரங்களும் ....... கூறுதுமே எனவும்;

நெய்யிடை நல்லதோர் சோறும்,
அல்வழக்கொன்றுமில்லா அணிக்கோட்டியர்கோன்
ஆகிய இரண்டு பாசுரங்களும் கூறுவனே எனவும் முடியும்.

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!

No comments: