Saturday, August 9, 2008

நாதமுனிகள்


ஆழ்வார்கள் பன்னிருவர் ன்னு சொன்னீங்க; அவங்க பாடினது தான் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் ன்னு சொன்னீங்க... அதான் பன்னிருவரின் குறிப்புகளும் கொடுத்தாச்சே.... இனி நாம பாட்டு படிக்கப் போவலாம்ன்னு நினச்சா, இவங்க ஆருப்பா இடையில வந்து நடை பயில்றதுன்னு கேட்குறீங்களா?

பன்னிருவரின் வாழ்நாள் குறிப்புகள் பார்க்கும் போது அவங்க வாழ்ந்த காலத்த கவனிச்சீங்களா? எல்லாரும் வெவ்வேற ஊர்ல, வெவ்வேற காலத்த சேர்ந்தவங்க.... அவங்க எழுதினது எல்லாம் எங்கங்க, யார்யார்ட்ட இருந்துதுன்னு யார்க்குத் தெரியும். அவை அனைத்தும் இருந்தனவா, இல்ல காலத்தின் கோலம், ஞாலத்தின் நீளம் ன்னு காணக்கிடைக்கப் பெறவில்லை ஒரு வரில்ல விட்டுட்டாங்களா?

தமிழகமெங்கும் சிந்தி சிதறிக் கிடந்த முத்து மணிகளையெல்லாம், தேடி அலைந்து தெளிவாய்க் கோர்த்து, எம்பெருமானுக்கு நாளும் சூட்டி அழகு பார்க்க அருள் புரிந்தவர் நாதமுனிகள் அவர்கள்தான்.

பிறந்த காலம் - கி.பி. 823 - கி.பி. 917
பிறந்த ஆண்டு - சோபக்ருத ஆண்டு
மாதம் - ஆனி
திருநட்சத்திரம் - அனுசம்
திதி - பௌர்ணமி (புதன் கிழமை)
இடம் - காட்டு மன்னார் கோயில் (வீரநாராயணபுரம்)
அம்சம் - சேனை முதலியாரின் படைத்தலைவர் கஜாநனர்.

நாதமுனிகள் யோகவித்தை, தேவ கான இசை ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். இவரது இயற்பெயர் திருவரங்க நாதன். ஆனால், இவர் சிறந்த யோகியாக இருந்ததால், இவரை திருவரங்க நாதமுனிகள் என்று அழைத்தனர். அதுவே பிற்காலத்தில் மருவி நாதமுனிகள் ஆயிற்று.

இவர் தம் குடும்பத்தாருடன் பல வட மாநில திருத்தலங்களுக்குச் சென்று எம்பெருமானைத் தரிசித்ததோடல்லாமல், அவருக்குத் தாமே திருத்தொண்டும் புரிந்து கொண்டும் இருந்தார். ஒரு நாள், காட்டுமன்னனார் கோயிலில் திருவருள் புரியும் எம்பிரான் நாதமுனிகள் கனவில் வந்து வீரநாராயணபுரத்திற்கே மீண்டும் வருமாறு அழைத்தார்.

இறைவனின் திருவுளப்படி, வீரநாராயணபுரம் திரும்பிய நாதமுனிகள் காட்டுமன்னனார் கோயிலில் மலர், திருவிளக்கு கைங்கரியம், கோயில் நந்தவனப் பராமரிப்பு, பிரசாதம் சமைத்தல், இறைவனை அலங்கரித்தல் என்று ஏகப்பட்ட இறைத் தொண்டு செய்து வந்தார். அவ்வாறு செய்து வருகையில் ஒருநாள், அக்கோயிலுக்கு புனிதயாத்திரை வந்த சில வைணவர்கள்,

ஆராவமுதே! அடியேனுடலம் நின்பால் அன்பாயே
நீராய்அலைந்துகரைய உருக்குகின்ற நெடுமாலே!
சீரார்செந்நெல்கவரிவீசும் செழுநீர்த்திருக்குடந்தை
ஏரார்கோலம் திகழக்கிடந்தாய்! கண்டேன் எம்மானே!
திருவாய்மொழி 5-8-1

என்னும் பாடலில் தொடங்கி,

உழலையென்பின் பேய்ச்சிமுலையூடு அவளை உயிருண்டான்
கழல்களவையேசரணாகக்கொண்ட குருகூர்ச்சடகோபன்
குழலின்மலியச்சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலைத்தீரவல்லார் காமர்மானேயநோக்கியர்க்கே
திருவாய்மொழி 5-8-10
என்னும் பாடல் முடிய உள்ள பத்து பாடல்களையும் அவர்கள் பாடினர்.

அவற்றைக் கேட்ட திருவரங்க நாதமுனிகள், அப்பாடல்களில் தன்னை மறந்தார். அவர்களிடம், ''நீங்கள் கடைசியாகப் பாடிய பாட்டில், ஓராயிரத்துள் இப்பத்தும் என்று வருகிறதே, அப்படியென்றால், உங்களுக்கு அந்த ஆயிரம் பாடல்களும் தெரியுமோ?'' என்று வினவினார்.

அவர்களோ, ''இல்லை சுவாமி, எங்களுக்கு இந்த பத்து பாடல்கள் மட்டுமே தெரியும்'' என்று பதிலளித்தனர்.

அப்பாடலில் ''குருகூர்ச்சடகோபன்'' என்று வருவதால், அவர் திருக்குருகூர் சென்று விசாரித்தால் அவற்றைப் பற்றி அறிய இயலும் என்று திருக்குருகூர் சென்றார்.

அங்கு எவரும் இதைப்பற்றி அறியவில்லை. இறுதியில், அவர் மதுரகவியாழ்வாரின் சீடனான பராங்குசதாசரை சந்தித்து அவரிடம் இதைப்பற்றி விசாரிக்கையில், அவர், '' திருவாய்மொழியும், பிரபந்த பாடல்களும் சில காலம் முன்னமேயே மறைந்துவிட்டன, தம் குருவான மதுரகவியாழ்வார் தமக்களித்த ''கண்ணிநுண்சிறுத்தாம்பு'' என்னும் பிரபந்தம் மட்டும் தம்மிடம் இருப்பதாகவும்..... அந்த பாசுரங்களை திருப்புளியாழ்வார் முன் பக்தியுடன் அமர்ந்து பன்னீராயிரம் முறை (12,000 முறை) ஓதினால் நம்மாழ்வார் நம்முன் தோன்றி, வேண்டுவன அருளுவார்'' என்று பதிலளித்தார்.

அதைக்கேட்ட நாதமுனிகள், மிகுந்த உவகையுடன், பராங்குசதாசரிடம், கண்ணிநுண்சிறுத்தாம்பு பாடல்களை உபதேசமாகப் பெற்று, நேரே ஆழ்வாரின் திருப்புளியமரத்திற்குச் சென்று நம்மாழ்வாரின் திருவடி முன் அமர்ந்து தியானம் புரிந்தார். பன்னீராயிரம் முறை கண்ணிநுண்சிறுத்தாம்பு பாடல்களை ஒருமுகமாய் ஓதினார்.

இதனால் அகம் மகிழ்ந்த ஆழ்வார், அசரீரீயாய்த் தோன்றி நாதமுனிகளின் வேண்டுதலை வினவினார். நாதமுனிகளும், திருவாய்மொழியுடன் மற்ற பிரபந்த பாடல்களையும் அடியேனுக்கு அருளுமாறு வேண்டினார்.''

நம்மாழ்வார், நாதமுனிகளின் முன் தோன்றி, பிரபந்தத்தின் நாலாயிரம் பாடல்களுடன், அவற்றின் பொருளையும், அஷ்டாங்க யோக இரகசியங்களையும் அருளினார்.

அவற்றைப் பெற்றபின்பும் அவர் யோகசமாதியிலேயே நிலைத்திருந்தார். மீண்டும் காட்டு மன்னனார் பெருமாள், அவரை திரும்ப வருமாறு அழைக்கவே மீண்டும் வீரநாராயணபுரம் புறப்பட்டார்.

அங்கு அவர் தான் பெற்ற புதையலை அனைவரும் அறியச் செய்தார். பிரபந்த பாடல்களை இனிய இராகம், தாளம் அமைத்தும், அதற்கேற்ற அபிநயம் பிடித்தும் இறைவன் முன் ஆடினார். இவ்வாறு அரையர் சேவைக்கு வித்திட்டதோடு அல்லாமல், தம் வழிவந்தோரையும் தொடரச் செய்தார்.

அரையர் சேவையை முதன்முதலில் தோற்றுவித்தவரும் இவரே! ஸ்ரீ வைணவ ஆச்சாரியப் பரம்பரையின் முதல் ஆச்சாரியரும் இவரே!

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்;
திரு நாதமுனிகள் திருவடிகளே சரணம்;

Monday, July 28, 2008

திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார்:

பிறந்த காலம் - 8 ம் நூற்றாண்டு
பிறந்த ஆண்டு - நள ஆண்டு
பிறந்த மாதம் - கார்த்திகை

திருநட்சத்திரம் - கார்த்திகை
திதி - பௌர்ணமி (வியாழக்கிழமை)

அம்சம் - சாரங்கம் (வில்)


சோழப் பேரரசில் உள்ள திருவல்லிநாடு என்னும் நகருக்கு அருகில் உள்ள திருக்குறையலூர் என்னும் கிராமத்தில், ஆலிநாடார் என்னும் சேணைத்தலைவர், வல்லித்திரு என்னும் தம்பதியரிடத்து உதித்தத் தெய்வப்பிறவியே திருமங்கையாழ்வார் ஆவார். அவரது இயற்பெயர் நீலன் ஆகும்.

சிறுவயதிலேயே வில், வாள், வேல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று அனைத்து வீரக்கலைகளிலும் சிறந்து விளங்கினார். வீரத்தோடு வேதங்களும், முறையான கல்வியும் கற்றுத் தேர்ந்தார்.

அவரது வீரத்திற்கும் விவேகத்திற்கும் பரிசாக சோழ மன்னர் திருமங்கை என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்ட ஒரு சிற்றரசை நீலருக்குப் பரிசாக வழங்கினார்.

எதிரிகளுக்கு இவர் காலனாக இருந்ததால் இவரை காலன் என்று அழைத்தனர். சோழ அரசில் பர என்னும் அடைமொழியை பெயருக்கு முன் வைக்கும் முறையால் (வேங்கையின் மைந்தன் என்னும் நூலில் நீங்கள் படித்திருக்கலாம்...பர மற்றும் உடையவர் என்னும் பட்டப்பெயர் மன்னர்களின் பெயருக்கு முன் ஒவ்வொரு முறையும் மாறி மாறி வரும் என்று) இவர் பரகாலன் என்னும் பெயருடன் சிற்றரசராக முடிசூட்டப்பட்டார்.

ஒரு முறை, நீலருக்கு.... சுமங்கலி என்னும் தேவகன்னிகையைக் காண நேரிட்டது. என்னாது, தேவகன்னிகையை ஒரு மனிதன் காண்பதா???

அட ஆமாம்பா, மெய்யாலுமேதான், சுமங்கலி என்னும் தேவகன்னிகை கபிலமுனி என்னும் முனிவரின் சாபத்தினால் சாதாரண மானுடப்பெண்ணாகப் பூலோகத்திலே பிறந்து குமுத வல்லி என்னும் பெயர் கொண்டு வளர்ந்தார். தன் பிறவியை பற்றி முழுதும் அறிந்த அந்தப் பெண், தன் தந்தையிடம், மணந்தாள் ஆலிநாடனையே மணப்பேன், என்று கூற, அவள் தந்தையும் அதற்கு சம்மதித்தார்.

விதியும் வந்து விளையாட,
மதியும் அதன் வழியில் தள்ளாட,
காலத்தின் கட்டுப்பாட்டில் கிடக்கும் மானுடர்களான நீலரும், குமுதவல்லியும் ஒருவரை ஒருவர் ஒரே நேரத்தில் காண நேர்ந்தது.

மங்கையர் கோனின் மனதைத் திருடிய அந்த தேவகன்னிகையைக் கண்ட மாத்திரத்திலேயே, நீலருக்கு அவள் மேல் காதல் அலர்ந்தது.

கண்டதும் காதல்; அவள்
கைப் பிடிக்கவும் ஆவல்;
கண்களெல்லாம் அவளின் தேடல்;
உள்ளமோ அவளிடமே ஓடல்...

தன் விருப்பத்தை அப்பெண்ணிடம் வெளிப்படுத்திய பொழுது, குமுதவல்லியார், அவருக்கு இரண்டு நிபந்தனைகளை விதித்தார். அதாவது,

1. அவர் பஞ்சசம்ஸ்காரம் செய்துக் கொள்ள வேண்டும்
2. ஒரு நாளைக்கு ஆயிரத்தெட்டு பெருமாள் பக்தர்களுக்கு அமுது படைக்க வேண்டும், ஓராண்டு கால அளவிற்கு. அவர்கள் பாதம் கழுவிய நீரால் நம் தலை கழுவ வேண்டும்.

இந்த இரண்டையும் செய்வதாக நீலரும் ஒப்புக் கொண்டார். அதன்படி அவரது முதல் கடனை முதலில் நிறைவு செய்தார்...

எப்படி நிறைவு செய்தார்??

பஞ்சசம்ஸ்காரம் என்பதை நல்வினை சடங்குகள் என்று தமிழில் சொல்லுவர். அதாவது,

1. தாப சம்ஸ்காரம் - (தாபம் என்றால் சூடு என்று பொருள்) பெருமாளின் திருஅடையாளங்களாகிய சங்கு, சக்கரத்தில், வலது தோளில் சக்கரத்தையும், இடது தோளில் சங்கையும் நிரந்தரமாகத் தரிப்பது.

2. புண்ட்ர சம்ஸ்காரம் - (திருமண் காப்புத் தரித்தல்) இறைவனின் பன்னிரண்டு திருப்பெயர்களைச் சொல்லி, பன்னிரு இடங்களில் திருமண் அணிதல். அதாவது,

கேசவாய நம என்று கூறி நெற்றியில் திருமண் அணிய வேண்டும். இதேபோல், நாராயணாய நம என்று நாபியிலும் மாதவாய நம என்று மார்பிலும் கோவிந்தாய நம என்று நெஞ்சிலும் விஷ்ணுவே நம என்று வலது மார்பிலும் மதுசூதணாய நம என்று வலது புயத்திலும் த்ரிவிக்ரமாய நம என்று வலது தோளிலும் வாமனாய நம என்று இடது நாபியிலும் ஸ்ரீதராய நம என்று இடது புயத்திலும் ரிஷிகேசாய நம என்று இடது தோளிலும் பத்மநாபாய நம என்று அடிமுதுகிலும் தாமோதராய நம என்று பிடரியிலும் திருமண் தரிக்க வேண்டும்.
3. நாம சம்ஸ்காரம் - (நாமம் என்றால் பெயர்) அதாவது, பெருமாளின் பெயர் அல்லது அவரது அடியவர்களான ஆசார்யர்களின் பெயர்கள் ஏதாவது ஒன்றை வைத்து, அப்பெயரின் முடிவில் தாசன், அடியவன் என்று வருமாறு குருவால் பெயர் வைக்கப் பெறுதல்.

4. மந்த்ர சம்ஸ்காரம் - (மந்த்ரம் - மந்திரம்) எட்டெழுத்துகளுடைய திருமந்திரத்தையும், த்வயம், சரமசுலோகம் ஆகியவற்றை அதன் மறைபொருளோடு குருவின் மூலம், காதில் உபதேசமாகப் பெறுதல்.

5. யாக சம்ஸ்காரம் - (யாகம் - பூசை, ஆராதணை) திருவாராதணை மற்றும் பூசை செய்யும் முறைகளை முறையாகக் கற்றுக் கொள்ளல்.

இவை ஐந்தனையும் குருவிடமிருந்து (ஆசார்யரிடமிருந்து) ஒரே சமயத்தில் பெறுதலே பஞ்ச சம்ஸ்காரம் ஆகும். பஞ்ச சம்ஸ்காரம் பெற்றுக் கொண்ட ஒருவர் வேத முறைப்படி வைணவராகிறார். இதன் மூலம் அவரது உடல், மனம், சொல், சிந்தனை அனைத்திலும் வைணவநெறிக்கான நல்வினைகளும், சிந்தனைகளும் அவர் மனத்தில் பதிய ஆரம்பிக்கும்.

அது சரி, நீலர் இந்த பஞ்ச சம்ஸ்காரத்தை எந்த குருவிடமிருந்து பெற்றுக் கொண்டார்??? நீலருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்த அந்த குரு யார்??? யார்?? யார்????

யார் அந்த குரு தெரியுமா???
அவர்தான் குருவுக்கெல்லாம் குருவானவர். குற்றமில்லா குணத்தவர். குறையொன்றும் வைக்கா குறையற்றவர்... எம்பெருமான் திருநறையூர் ஸ்ரீநிவாசப் பெருமாள்....

இறைவனையே குருவாகக் கொண்டு, அவர் மூலம் பஞ்ச சம்ஸ்காரம் பெற்ற ஒரே வைணவர், நம்ம நீலர்தான்.

2. கட்டியவள் பேச்சை மீறலாம், காதலியின் பேச்சை.... அய்யோ! அபச்சாரம், அபச்சாரம்.... மீறவேப் படாது.....

இரண்டாவது வேண்டுகோளையும் இளைக்காமல் ஏற்றுக் கொண்டு, அதன்படி செய்தார்.

நாம என்ன சொன்னாலும் இவர் கேட்குறாருப்பா, இவருதான் உலகத்திலேயே ரொம்ப ரொம்ப நல்லவரு.... நல்லவரு மட்டுமா? நல்லவர், வல்லவர், என் உள்ளக் கள்ளவர் என்று... நீலர், குமுதவல்லியின் திருமணம் இனிதே நடந்தேறியது.

இரண்டாவது கடனை நிறைவேற்றும் போது, அவர் சளைக்காவிட்டாலும், அவரிடமிருந்த செல்வம் இளைத்துவிட்டது. அவரிடம் இருந்த செல்வம் குறைந்ததால், அவரால் கப்பம் செலுத்த இயலவில்லை. அதனால் கோபம் கொண்ட சோழப் பேரரசன் அவரது அரசைக் கைப்பற்றிக் கொண்டார். ஆனால், அவர் அதற்காகக் கவலைப் படவில்லை.

எப்படியாவது அடியவர்களுக்கு அமுது படைக்க வேண்டும் என்பதிலேயே திண்மையான எண்ணம் கொண்டார். ஆனால், அவர் கையில் தான் பொருள் இல்லையே, பின் வெறும் எண்ணம் மட்டும் எப்படி நிறைவேறும்.... கானல் நீரில் தாகம் எவ்வாறு தீரும்??? வெறுங்கையில் எப்படி முழம் போட முடியும்....? எப்படி? எப்படி?? ஆழ்ந்த சிந்தனை, ஆழ்ந்த, ஆழ்ந்த சிந்தனை.....அதன் இறுதியிலே ஒரு ஆச்சரியமான முடிவு...

அதுதான், 'நாலு பேருக்கு நல்லது ன்னா எதுவுமே தப்பில்ல' அப்படின்னு, அவர் தன் முயற்சிக்காக எந்த செயலையும் செய்வதற்குத் துணிந்தார்.

அதாவது, பொருட்தேவைக்காக வழிப்பறி செய்ய ஆரம்பித்தார். அது எப்படிங்க, ஒரு வைணவர், அதுவும் இறைவனிடமே பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டவர், அவர் எப்படி வழிப்பறியெல்லாம் செய்வார் என்று நீங்க கேட்கறது எனக்குப் புரியுது...
காரணமின்றி காரியமில்லை!! ஆனா, அவர் சிந்தை முழுதும் முகுந்தனின் அடியவர்களுக்கு அன்னமிடுவதிலேயே மூழ்கி இருந்தது. என்ன காரியம் செய்தாகிலும், எம்பிரானின் அடியவர்களுக்கு அழிபசி தீர்ப்பதில்தான் கவனம் முழுதும் இருந்தபடியால், அவர் செய்வது சரியா? முறையா? என்று கூட சிந்தை செய்யவில்லை.

ஆனா, நீங்க என்ன சொன்னாலும் தப்பு தப்புதான்?? வழிப்பறிங்கறது எவ்வளவு பெரிய தப்பு.... விதிதான் அவர இப்படி எல்லாம் செய்ய வைக்குதுன்னா, விதியை விதிக்கும் வித்தகன் இதை எல்லாம் பொறுமையா வேடிக்கையா பார்த்துக் கொண்டிருந்தார்?? அவராவது வந்து தன் அடியவர்களுக்கு ஒருவர் தவறான வழியில் அன்னமிடுகிறாரே, என்று அவருக்கு உதவலாம் இல்லையா???

ஆமாம் உதவலாம்...

என்ன ஆமாம் உதவலாம்..??? இறைவன் வந்தாரா? தடம் மாறிய தன்யனைக் காப்பாற்றினாரா?

அமைதியா இருப்பா... ஆண்டவன் வருவான்... அருளுவான்.... அதற்கான காலம் நேரம் வாய்க்க வேண்டாமா???

பாட்டும் அவனே... பாவமும் அவனே..... பாவமும் அவனே... பாவத்திற்கு சம்பளமும் அவனே.... புண்ணியமும் அவனே.... புண்ணும் அவனே... புண்ணுக்கு மருந்தும் அவனே... மருந்தும் அவனே.... விருந்தும் அவனே... எல்லாமும் அவனே... எல்லாவற்றிலும் அவனே.... வினைக்கு வித்திடுபவனும் அவனே.... வினையும் அவனே.... வினையின் விளைவும் அவனே... வினையால் வீழ்த்துபவனும் அவனே... வினையை வீழ்த்துபவனும் அவனே....

அத்தகையவனுக்குத் தெரியாதா?? எதை, எக்காலம் வரைக்கும் செய்ய வைக்க வேண்டும் என்று??? எங்கு முடிச்சு போட வேண்டும், எந்த இடத்தில் முடிச்சியை அவிழ்க்க வேண்டும் என்று...

முடிச்சியை அவிழ்க்கும் காலம் வந்தது... கருணை வெள்ளம் பொங்க ஆரம்பித்தது; இறைவனும் இறைவியும் மணக்கோலம்பூண்டு, திருமங்கையிலுள்ள திருமணங்கொல்லை என்னும் கானகத்தின் வழியே, திருமண ஊர்வலமாய், கல்யாண கானங்கள் இசைக்க சென்று கொண்டிருந்தனர்.

ஏன் அவங்கல்லாம் அந்த பக்கமா போகனும்???

ஏன்னா, பரகாலனும் அவனது, பட்டாளங்களும் பதுங்கியிருக்கும் பகுதி அது... கணக்கு வாத்தியார் போட்ட கணக்கு தப்பாகலாம், கமலக்கண்ணன் போட்ட கணக்கு தப்பாகுமா??

பரகாலனும் அவனது கூட்டத்தினரும், திருமணக் கூட்டத்தை வழிமறித்து, அங்கிருந்த அனைவரின் பொருட்களையும் கைப்பற்றினர், மணமக்களின் உடைமைகள் உட்பட... எல்லாமும் கவர்ந்த பின்பும், கள்ளழகரின் காலில் ஒரு மெட்டி மட்டும் மீதம் இருந்தது... மீதம் இருந்த மெட்டியையும் கழற்ற முயன்றார், நீலர். எவ்வளவு முயன்றும் இயலவில்லை அந்த காலனால், பர காலனால்.

எவ்வளவு முயன்றும் அவர் முயற்சி தோல்வியில் முடிந்தது. சரியென்று, அவர்கள் அந்த மெட்டியை விட்டு விட்டு, மற்ற உடைமை கள் அனைத்தையும் மூட்டையில் கட்டித் தூக்க முயன்றனர். ஆனால், அந்த முயற்சியும் வீணாய் போனது... எவ்வளவு முயன்றும் அவர்களால் முடியவில்லை. ஆனால் முடிந்தது... பரகாலனின், பாவகாலம் முடிந்தது.

அதாவது, முடிவடையும் நேரம் வந்தது... உடனே கோபம் கொண்ட பரகாலன், 'ஏய்! நீ ஏதோ மந்திரம் செய்து விட்டாய் அதனால் தான், என்னால் கழற்றவும் இயலவில்லை, கவர்ந்ததைக் கொள்ளவும் முடியவில்லை. என்ன மாயம் செய்தாய், என்ன மந்திரம் செய்தாய், உண்மையை சொல்' என்று ஆத்திரத்துடன் கல்யாண மாப்பிள்ளையிடம் கத்தியை நீட்டி மிரட்டினார்.

உடனே, மாதவனின், மந்தகாசம் சிந்தும் முகத்தில் தவழ்ந்த மந்திர புன்னகையுடன், நம் கலியா! என்னும் பெயரிட்டு, 'நம்கலியா, வா, என் அருகில் வா, உனக்கு நான் அந்த மந்திரத்தை சொல்கிறேன்,' என்று அருகில் அழைத்து, நம் கலியனின் காதிலே,

தீயவற்றிற்கு எட்டாத, தின்னத் தின்னத் தெவிட்டாத தேனினும் இனியதாய, நூற்றெட்டு திருத்தலத்தின் தலைவனின், பாவங்களனைத்தையும் வெட்டுபவனின் பெயர் கொண்ட அந்த எட்டெழுத்து மந்திரத்தை நம்கலியனின் காதிலே பக்குவமாய் "ஓம் நமோ நாராயணா" என்று ஓத நம் கலியனின் கர்மங்கள் அனைத்தும் கழிந்தன.

எம்பெருமான், பெரிய பிராட்டியுடன் கருட வாகனத்தில் இருந்து அவருக்கு அருள் பாலித்துவிட்டு மறைந்தார். இல்லை, இல்லை... நம் கலியன் அந்த இறைவனைத் தனக்குள்ளே ஆழ்த்திக் கொண்டார், தானும் அந்த இறைவனுக்குள்ளே ஆழ்ந்தார்.

அந்த கணமே, நம் கலியனுக்குள்ளே, கட்டுண்டு கிடந்த கருணை வெள்ளம் கரையை உடைத்து அகிலமெல்லாம் பாய ஆரம்பித்தது. இறைவன் மீதான அன்பும், பக்தியும் மடைதிறந்த வெள்ளமென பாசுரங்களாய் பெருக்கெடுத்தது. ஆழ்வாரின் மீதான ஆண்டவனின் அருள், ஆழ்வாரின் மனத்திற்குள்ளிருந்து உடைந்து கண் வழியே கண்ணீராய், திருவாய் வழியே திவ்யமொழிகளாய் வெளிப்பட்டது.

அதுமுதல், இறைவன் இருக்கும் திருத்தலங்களுக்கெல்லாம் சென்று அவரது அருள்கடலிலே ஆழ்ந்து, ஆழமான கருத்துடைய பாடல்களைப் பாடிப் பாடி பரவசம் கொண்டார்.

எப்படி, வில்லும் வாளும் ஏந்திய வீரனின் வாயில் பக்திமயம் பொங்கும் கானங்களா??? ஆமாம் பா ஆமாம்.... ஏன் சந்தேகமா??? அவர் இன்னும் பழைய பரகாலன் இல்ல, புதிய நம் கலியன், திருமங்கையாழ்வார்... அவர் பாடாமல், பின் எவரால் பாட இயலும்?? அதுவும், அவர் பாடின பாடல்கள் ஒன்றா? இரண்டா??

திருமங்கையாழ்வாரின் அருள் ஆக்கங்கள்:

பெரிய திருமொழி 1084
குறுந்தாண்டகம் 20
நெடுந்தாண்டகம் 30
திருவெழுக்கூற்றிருக்கை 1
சிறிய திருமடல் 40
பெரிய திருமடல் 78.

இப்போ புரியுதுங்களா?? ஆவதும் பெண்ணாலே... அழிவதும் பெண்ணாலே... ஆம், நன்மைகள் ஆவதும் பெண்ணாலே, தீமைகள் அழிவதும் பெண்ணாலே.... துணைவியுடன் இருந்து அருள் பாலிக்கும் ஒரே ஆழ்வார், திருமங்கையாழ்வார்தான்.

நாற்கவி:

1. ஆசுகவி - உடனுக்குடன் பாடுவது
2. சித்திரக்கவி - பாடலும், பாடலின் பொருளும் சித்திர அலங்காரமாய் அமைய பாடுவது
3. விஸ்த்தாரக்கவி - விஸ்த்தாரமாக, விரிவாகப் பாடுவது
4. மதுரகவி - இசை நயத்துடன் பாடுவது

இந்த நான்கு வகை கவிகளிலும், திருமங்கையாழ்வார் திறமையானவராக இருந்ததால், அவரைப் பாராட்டி திருஞான சம்பந்தர் அவர்கள் அவருக்கு 'நாலு கவி பெருமாள்' என்று பட்டமளித்து தன் வேலையும் அவருக்குப் பரிசாக அளித்தார்.

ஓம் நமோ நாராயணாய நம!!
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

Thursday, July 17, 2008

திருப்பாணாழ்வார்.

திருப்பாணாழ்வார்:

காலம் - 7 ம் நூற்றாண்டு ( 750 - 780 கி.பி.)
ஆண்டு - பிரசோத்பதி (தவறென்றால் திருத்தவும்)
மாதம் - கார்த்திகை
திருநட்சத்திரம் - ரோகிணி
ஊர் - உறையூர்.
அம்சம் - ஸ்ரீவத்சம் (ஸ்ரீமன் நாராயணனின் மார்பில் இருக்கும் மச்சம்)

திருப்பாணாழ்வார் பிறப்பு பற்றிய முழுமையான தகவல்கள் அறியப்படவில்லை. இவர் உறையூருக்கு அருகில் உள்ள திருக்கோழி என்னும் கிராமத்தில் வாழ்ந்த, பாணர் என்னும் தீண்டத்தகாத இனத்தைச் சேர்ந்த, ஒரு தம்பதியரால் வளர்க்கப்பட்டார்.

பாணர் என்னும் இனம் உண்மையில் தீண்டத்தகாத இனம் அல்ல. அவர்கள் இறைவன் பேரிலும், மன்னனைப் பற்றியும் பாண் என்னும் இசைக்கருவியினால் இனிமையான பாடல்களைப் பாடி, கேட்போர் அனைவரையும் அகிலம் மறக்கச் செய்வர். அத்தகைய இனத்தில் வளர்ந்த நம் திருப்பாணாழ்வாருக்கு பாடல்கள் பாட பயிற்சியும் வேண்டுமோ??

இவர் இறைவனுடன் இரண்டறக் கலந்த அந்த சுவையான தகவலை அறிவோம் வாருங்கள்....

திவ்ய தேசங்களில் தலையாயதாக விளங்கும், திருவரங்கம் காவேரித் தாயின் கரையில் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே! திருப்பாணாழ்வார் வாழ்ந்த காலத்தில், காவிரியின் மறுகரைக்கு, அதாவது அரங்கன் அருள் பாலிக்கும் திருத்தலத்திற்கு, பாணர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வர அனுமதியில்லை.

அதனால், தினமும் மறுகரையில் நின்று கொண்டே, மாலவனை மனதிற்குள்ளேயே நினைத்து மதுரமான பாடல்களை பாண் என்னும் இசைக்கருவியிலே பாடிப் பாடி பரவசம் கொள்வார்.

ஒருநாள் வழக்கம் போல் ஆழ்வார் தன்னை மறந்து அரங்கனை அந்தரங்கமாய் தரிசித்துக் கொண்டிருந்த வேளையில், திருவரங்கத்தின் அர்ச்சகர் இலோக சாரங்க முனி என்பவர், திருவரங்கப் பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்வதற்காகக் காவிரியில் நீர் எடுக்க வந்தார். அப்பொழுது, திருப்பாணாழ்வார் கரையில் நின்று கொண்டிருந்தார். அவரைத் தீண்டாமல், சென்று நீர் கொணர வேண்டும் என்பதற்காக பல முறை, அந்த அர்ச்சகர் அவரை விலகச் சொல்லி கடிந்து கொண்டார்.

ஆனால், திருப்பாணாழ்வார் பக்தியில் மூழ்கியிருந்த படியால் அவர், அந்த அர்ச்சகர் அழைத்ததை அறியவில்லை. எனவே, கோபம் கொண்ட அர்ச்சகர், ஒரு கல்லை எடுத்து திருப்பாணாழ்வார் மேலெறிந்தார். உடனே, தன் சுயநினைவுக்கு வந்த திருப்பாணாழ்வார் விலகி நின்றார்.

பிறகு, திருமஞ்சன நீரை எடுத்துக் கொண்டு, ஆலயத்திற்குள் நுழைந்த இலோக சாரங்க முனி, அங்கே திருவரங்கனின் திருநெற்றியில், அதாவது எந்த இடத்தில் திருப்பாணாழ்வாருக்கு அடிப்பட்டதோ அந்த இடத்தில் இறைவனுக்கு இரத்தம் கசிந்தது. அதைப் பார்த்து பதறிய அர்ச்சகர், மிகுந்த மனப் பாரத்துடன் வீடு திரும்பினார்.

இரவு முழுதும், தான் ஏதோ பெரிய பாவம் செய்து விட்டதாய் பரிதவித்த அர்ச்சகரால் உறங்க முடியவில்லை. அன்று இரவே, திருவரங்கப் பெருமாள் அர்ச்சகரின் கனவில் தோன்றி, 'திருப்பாணாழ்வாரை உன் தோளில், அவர் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர் என்ற எண்ணம் எள்ளளவும் இல்லாமல் ஏற்றிக் கொண்டு வா! இதுவே நீ செய்த பாவத்திற்கு பரிகாரமாக அமையும்' என்று கூறினார்.

மறுநாள் காலையிலேயே, திருப்பாணாழ்வாரிடம் சென்று, நடந்தவற்றைக் கூறி அவரைத் தன் தோளில் ஏறிக் கொள்ளுமாறு பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொண்டார். ஆனால், திருப்பாணாழ்வாரோ, தான் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர். தங்கள் தோளில் நான் செல்வது சரியாகாது' என்று மிகவும் பிடிவாதமாக மறுத்தார். ஆனாலும் அர்ச்சகர் விடாபிடியாக அவரைத் தன் தோள் மேல் தூக்கி வைத்துக் கொண்டு, திருவரங்கக் கோயிலுக்குள் சென்றார். அக்காட்சியைப் பார்த்த ஊர்மக்கள் அனைவரும் அதிசயித்துப் போயினர்.

கோயில் கருவறைக்குள் நுழைந்ததும், தன் தோளில் இருந்து ஆழ்வாரை இறக்கிவிட்ட அர்ச்சகர், ஒரு ஓரமாக பணிவாக நின்று நடப்பதை எல்லாம் கவனித்தார். கோயிலில் முதல் முறையாக கால் வைத்த திருப்பாணாழ்வார், கருவறையில் அவர் முதன் முதலில் கண்டது, இறைவனின் திருப்பாதம் தான்.

அவர் படிப்படியாக இறைவனின் திருவடி முதல் திருமுடி வரை ஒவ்வொன்றாகக் கண் குளிரத் தரிசித்தார். அத்துடன் அவர் நின்று விட வில்லை. தன் கண்ணால் கண்டு, உயிருருக அனுபவித்த இன்பத்தை, பத்து பாசுரங்களில் இறைவனின் திருவடி, தூய ஆடை, உந்தி(தொப்புள்), திருமார்பு, கண்டம்(கழுத்து), பவளவாய், கமலக்கண்கள், திருமேனி உட்பட பெருமாளைப் பற்றிய ஒவ்வொரு அழகையும் அமலனாதிபிரான்... என்று துவக்கத்தில் வைத்துப் பாடி பரவசமடைந்து, இறுதியில்.....

அவர் திருவழகைக் கண்ட கண்கள் இனி உலகில் வேறு எதையும் காணாது என்று அக்கணமே, திருவரங்கப் பெருமானின் திருவடியில் சென்று இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டார்.

தீண்டத்தகாதவர் என்று ஊராரால் ஒதிக்கவைக்கப்பட்டவரின் பக்திக்கு மெச்சி, எம்பெருமான் அவருக்கு அளித்த சீரும் சிறப்பும் இவ்வுலகில் வேறு எவருக்கும் கிடைக்காத அரிய பாக்கியம். இதிலிருந்து நாம் அறிவது, இறைவனை முழுமனத்துடன் அறிந்தால், அரி அவன் எவருக்கும் அரியவன் அல்ல. எந்த சாதியாயினும், எம்மதமானாலும், எல்லா உயிருக்கும் எவ்வித வேறுபாடுமில்லாமல் அருள் புரிவான் அந்த பரம்பொருள்.

தன்னை முழுமனத்துடன் தருவதே இறைவனுக்கு சிறந்த காணிக்கை, அது யார் வேண்டுமானாலும் தரலாம், வரையறை இல்லாது...

திருப்பாணாழ்வார், பாண் என்னும் இசைக்கருவியில் வல்லவராயும், எப்பொழுதும் பெருமாளைப் பற்றியே பாடிக்கொண்டிருப்பதாலும், அவர் பாண் பெருமாள் எனவும்,
இலோக சாரங்க முனியின் தோளில் ஏற்றிச் சென்றதால், முனிவாகனன் எனவும் அழைக்கப்படுகிறார்.

இவர், இறைவனைக் கண்ட பொழுதிலேயே, தன் ஊண் உருக, உயிர் கசிய இறைவனின் பேரருளையும், புறத்தோற்ற அழகையும் கண்டு பாடிய பாடல்களே அமலனாதிபிரான் ஆகும்.

அமலனாதிபிரான், அமுதத்திரட்டில், முதலாயிரத்தின் ஆறாம் திரட்டாக உள்ளது.
ஓம் நமோ நாராயணாய நம!!
திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்!!

Thursday, July 10, 2008

தொண்டரடிபொடி ஆழ்வார்

தொண்டரடிபொடி ஆழ்வார்:

பிறந்த காலம் - 7 ம் நூற்றாண்டு (740 - 800)
ஆண்டு - பிரபவ
மாதம் - மார்கழி
நட்சத்திரம் - கேட்டை
கிழமை - செவ்வாய்
அம்சம் - வைஜெயந்தி வன மாலை
பிறந்த ஊர் - திருமண்டலங்குடி.

தொண்டரடிபொடி ஆழ்வார், திருமண்டலங்குடி என்னும் ஊரில், 'குடுமி சோழியப் பிராமணர்' என்று அழைக்கப்படும் விப்ர இனத்தில் பிறந்தவர். அவர்களது பணியே எம்பெருமானைப் பற்றியப் புகழினைப் பாடுவதே ஆகும்.

தொண்டரடிபொடி ஆழ்வார் பிறந்த 12 ம் நாள், அவர் 'விப்ரநாராயணர்' என்றுப் பெயரிடப்பட்டார். சிறு வயதிலே அவருக்கு முறையான கல்வியும், வேதமும் போதிக்கப்பட்டு, அவரும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தார். அவர் பெரியவரானாலும் சிறு வயதினரானாலும் ஒரே மாதிரியாகவே மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தி வந்தார்.


ஒரு நாள், ஸ்ரீமன் நாராயணனின் சேனைத்தலைவரான, விஸ்வக்சேனன் இப்பூவுலகிற்கு வந்து, விப்ர நாராயணர் இம்மண்ணில் பிறந்த நோக்கத்தையும், அவர் முக்தி அடைவதற்கான வழிமுறையையும் எடுத்துக் கூறினார்.

அதைக் கேட்ட பிறகு, விப்ர நாராயணனுக்கு ஸ்ரீ மன் நாராயணனின் மேல் அன்பும் பக்தியும் மிக ஆரம்பித்தது. அவர், இறைவன் மேல் தாம் கொண்ட பக்தியை, எம்பெருமான் குடி கொண்டிருக்கும் எல்லா திருத்தலங்களுக்கும் சென்று அவரின் சேவையைக் கண்ணாரக் காண்பதன் மூலம் வெளிப்படுத்த முடிவு செய்தார். அதன்படி அவர்,

மூவுலகத்திற்கும் முதல்வனானவனின் திருத்தலங்களில் முதன்மையானது, திருவரங்கம். எனவே, திருவரங்கத்தில் இருந்து துவங்கினார். அங்கே,

மூலவர் சந்நிதியில் திருவரங்கப் பெருமான் ஆதிசேஷனின் மேல் சயனத்திருக்கோலத்தில் வீற்றிருக்கும் திருத்தோற்றத்தைக் கண்டு அந்த அழகிலே மயங்கித் தன்னையும், தரணியில் மற்றுமுள்ள யாவற்றையுமே மறந்தார்.

இனி, இவ்வுலகில் இறைவன் அரங்கனைத் தவிர வேறு எதையும் தன் கண்ணாலும் காணாமல், அரங்கன் ஒருவனுக்கேத் தான் அடிமையாய் இருந்து தன் வாழ்நாள் முழுவதும் இறைவனுக்குச் சேவை செய்தே கழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

அதன் பிறகு, அவர் திருவரங்கத் திருத்தலத்திலேயேத் தங்கி, இறைவனுக்கு நாள்தோறும் புதுமலர்களைக் கொய்து, பெருமாளுக்குப் பூமாலை அணிவித்து அழகுப் பார்த்துவிட்டுத் தான், தன் பணிகளைத் துவங்குவார்.

அதற்காக அவர், அத்திருத்தலத்திலே ஒரு அழகிய, புது பூங்காவனத்தையே உருவாக்கி, அதன் மத்தியில் தனக்காக ஒரு சிறு குடிலையும் அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்.

இவ்வாறு அவர் உலகில் எதையும் காணாமலும், எப்பொருள் மேலும் இச்சைக் கொள்ளாமலும், யாரையும் விரும்பாமல் வாழ்ந்து வந்தார். இவர் இப்படியேதான் தன் வாழ்நாள் முழுவதும் இருந்தாரா???

அதுதான் இல்லை. என்ன இல்லையா? ஆம், ஐயா! அவர் வாழ்விலும் வீசியது வஞ்சியரின் வாடைக் காற்று!

திருக்கரம்பனூர் என்னும் ஊரில் தேவி, தேவதேவி என்று அக்காள், தங்கையர் இருவர் இருந்தனர். அவர்கள் மன்னர்கள் முன் நடனமாடி பரிசில் பெறும் இனத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் ஒரு முறை உறையூர் மன்னன் முன் ஆடி, பரிசில் பெறுவதற்காக வந்திருந்தனர்.

பரிசில் பெற்றுவிட்டு, மீண்டும் ஊருக்குத் திரும்பும் வழியில், திருவரங்கப் பெருமானை வழிபடலாம் என்று எண்ணி அத்திருத்தலத்திற்குச் சென்றனர். அப்பொழுது, அங்கிருந்த பூங்காவனத்தின் அழகும், அமைதியும் அவர்கள் இருவரையும் மிகவும் கவர்ந்தது. நாம் இப்பொழுது இருப்பது பூலோகத்திலா? இல்லை, இந்திரலோகத்திலா என்று அதிசயித்து, இந்த அழகிய நந்தவனம் எவருக்கு சொந்தமானது? என்று வினவினாள்.

அதற்கு அவள் அக்காள், 'இது விப்ர நாராயணர் என்னும் மிகப்பெரிய விஷ்ணு பக்தன் உருவாக்கியது. அவர் இறைவனுக்கு நாள்தோறும் பூமாலை அணிவிப்பதற்காகவே இதை உருவாக்கினார்,' என்று பதிலளித்தாள்.

'தான் அவரைக் காண வேண்டும்' என்று தன் தமக்கையிடம் கூறினாள். அதனால், இருவரும் அவரைக் காண அவர் குடிலுக்குச் சென்றனர். அங்கே அவரின் அழகைக் கண்டு இருவரும் மயங்கினர். முதல் பார்வையிலேயே, தேவதேவி விப்ர நாராயணரை விரும்ப ஆரம்பித்தாள்.

உடனே தேவதேவி தன் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தாள். ஆனால், அவர் அவளை உதாசினப்படுத்திவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த தேவதேவி, தான் இக்குடிலிலேயே தங்கி மிக விரைவில் அவரின் மனத்தை மாற்றுவதாக உறுதிக் கொண்டாள்.

மூத்தவளான தேவி, தேவதேவியை ஆசிர்வதித்து விட்டு, தன் ஊருக்குப் புறப்பட்டார். தேவதேவியும், தன் பொருளையெல்லாம் இறைவனுக்கு அளித்து விட்டு, முனிவர்களைப் போல் உடையணிந்து வந்து, விப்ர நாராயணனிடம், ' தான் இதுவரை எவருக்கும் உபயோகமில்லாமல், ஒரு நரக வாழ்க்கை வாழ்ந்ததாகவும், இனியாவது, தான் அவருடன் இணைந்து அவருக்குத் துணையாய் உதவிகள் புரிந்து இறைவனுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறினாள்.

இயல்பாகவே அன்புள்ளம் கொண்ட விப்ர நாராயணரும் அவளின் பேச்சுக்கு மனமிரங்கி, தேவதேவியின் விருப்பத்திற்கு சம்மதம் அளித்தார். அன்று முதல் இருவரும் இணைந்து அரங்கநாதனுக்குப் பூசை, தொண்டுகள் செய்தனர்.

தேவதேவியின் அன்பில் மெச்சிய விப்ர நாராயணரின் மனம் மெதுமெதுவாக தேவதேவியின் பக்கம் திரும்பியது. அவள் கூறியபடி, விப்ர நாராயணனை முழுவதுமாக மாற்றி, இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர்.

ஒருநாள், தேவதேவி தான் தன் பெற்றோரையும், தமக்கையையும் பார்க்க விரும்புவதாகக் கூறினாள். உடனே, விப்ர நாராயணனும் உடன் வருவதாகக் கூறினார். இருவரும் திருக்கரம்பனூர் வந்து சேர்ந்தனர்.

தேவதேவியின் தாயார், பொருளில்லாத விப்ரநாராயணனை வீட்டிற்குள் அனுமதிக்க விரும்பவில்லை. உடனே, விப்ர நாராயணனும், மிகவும் மனமுடைந்த நிலையில் நந்தவனத்திற்கு வந்தார். அவர், தேவதேவி இல்லாமல் இனி தன்னால் ஒரு வினாடி கூட வாழ முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டார்.

இக்காட்சியைக் கண்ட எம்பெருமான், விப்ர நாராயணனை அந்த மாயையிலிருந்து விடுவிக்க முடிவு செய்தார்.

உடனே, அருட்பெருஞ்சோதியான பெருமாள், விப்ரநாராயணனின் சீடனைப் போல் உருமாறி, தேவதேவியின் தாயார் வீட்டிற்கு வந்து, ஒரு வெள்ளி வட்டலைக் கொடுத்து, ' இதை என் குரு கொடுத்து வரச் சொன்னார்' என்று கூறி ஒரு வட்டலை அந்த அம்மாவிடம் கொடுத்தார்.

தேவதேவியின் தாயாரும் மிகுந்த மகிழ்வுடன் அதைப் பெற்றுக் கொண்டு, 'உன் குருவை உடனே வரச் சொல், அவர் போனதிலிருந்து என் மகள் உணவு, உறக்கம் இல்லாமல் இருக்கிறாள், என்று கூறி அனுப்பினாள்.

மறுநாள், காலை திருவரங்கக் கோயிலின் அர்ச்சகர், பூசை செய்யும் போது, நாள்தோறும் இறைவனுக்கு பூசை செய்ய உதவும் ஒரு வட்டல் காணாமல் போனதை அறிந்து, மிகப் பதற்றத்துடன் சென்று மன்னனிடம் புகார் செய்தார். உடனே காவலர்கள் சென்று ஊரெங்கும் தேடி, அது தேவதேவியின் வீட்டிலிருப்பதை அறிந்தனர்.

வழக்கு விசாரணையின் போது, தேவதேவியின் தாயார், விப்ர நாராயணனின் சீடன் அளித்தது, என்று கூறினார். அதனால், விப்ர நாராயணன் சிறை வைக்கப்பட்டார். அவர் மிகவும் மன வருத்தத்துடன் தனக்கு மட்டும் ஏன் இவ்வாறு நடைபெறுகிறது என்று மனம் நொந்து இறைவனை வேண்டினார்.

அன்று இரவு, திருவரங்கப் பெருமாள், மன்னனின் கனவில் தோன்றி நடந்தவற்றைக் கூறி, விப்ர நாராயணனை விடுவிக்குமாறு கூறினார். அவ்வாறே மன்னனும் செய்தார்.

மறுநாள் காலை, விடுதலை யான விப்ர நாராயணன், தான் இவ்வுலகில் ஏன் வந்தோம் என்னும் உண்மையை உணர்ந்து, திருவரங்கப் பெருமானின் சந்நிதிக்குச் சென்று பெருமாளை முழுமையாகச் சரணடைந்தார்.

அதன் பின், அவர் திருவரங்கத்திலே இருந்த எம்பெருமானின் பக்தர்கள் அனைவரின் காலிலும் விழுந்து வணங்கி, அவர்களின் திருப்பாதம் பட்ட மண்ணை(திருவடிகளின் பொடிகளை) எடுத்து தன் தலையில் இட்டுக் கொண்டு, அரங்கநாதனின் அருமை பெருமைகளை எல்லாம் பாடலாகப் பாடினார்.

அதுமுதலே, விப்ர நாராயணர், தொண்டரடிபொடி ஆழ்வார் என்று அழைக்கப்பெற்றார்.

அவர் பாடிய பாடல்கள்:

. திருப்பள்ளி எழுச்சி
. திருமாலை ஆகியன ஆகும்.

ஓம் நமோ நாராயணயா நம!!
தொண்டரடிபொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்!!

Friday, July 4, 2008

ஆண்டாள்


ஆண்டாள்:

காலம் - ஏழாம் நூற்றாண்டு ( 716 - 732)ஆண்டு - நள
மாதம் - ஆடி
நாள் - செவ்வாயக் கிழமை
நட்சத்திரம் - பூரம்
திதி - பஞ்சமி (சுக்லபட்சம்)

இவை எல்லாம் கோதையின் பிறந்த சாதகக் குறிப்புகள் அல்ல. இவை அனைத்தும் நம்ம விஷ்ணு சித்தர் கோதையைக் கண்டெடுத்த நேரக்குறிப்புகள்.

எவ்வாறு குழந்தை வரம் வேண்டி ஜனகன் யாகம் செய்யும் பொழுது சீதா தேவியைக் கண்டெடுத்தாரோ, அதே மாதிரிதான் கோதையும் நம்ம பெரியாழ்வாருக்குக் கிடைத்தார்.

ஆ! ஆ! அது இல்லங்க, பெரியாழ்வாரும் புத்திர காமேஷ்டி யாகம் செய்தாரா என்று குறுக்க நெடுக்க கேள்வி கேட்கப்படாது.

தன் தாயுமான ஆழ்வார் தனியே தவிப்பதைப் பொறுக்காத இறைவன், தன் துணைவியைக் குழந்தையாய் அனுப்பி, அந்த இறைவியை வளர்க்கும் பொறுப்பை பெரியாழ்வாருக்கு அளித்தருளினார்.

பட்டர் பிரான் தன் வழக்கமான மலர்க் கைங்கரிய சேவையைச் செய்ய ஒரு நாள் நந்தவனத்திற்கு சென்று மலர்க் கொய்து கொண்டிருக்கையில், ஒரு துளசிச் செடியின் அடியில் சீதாதேவியின் அம்சமாக, பூதேவியின் புதல்வியாக அந்த குழந்தையைக் கண்டெடுத்தார். அக்குழந்தைக்குக் கோதை என்று பெயரிட்டு தாயன்போடு, பக்தியையும் ஊட்டி வளர்த்தார்.

கோதையும் ஆழ்வாரின் அரவணைப்பிலும், அங்கு இருந்த பக்திமயமான சூழலிலும் இயல்பு நிலைக்கு அதிகமான பக்தியையும், பாசத்தையும் இறைவன் மேல் வைத்து வளர்ந்தார். கோதை, பெரியாழ்வாருடன் சேர்ந்து இறைவனுக்கு மலர்க்கைங்கரியம் செய்வதிலும், இறைவனுக்குத் தொண்டுகள் புரிவதிலும் துணையாய் இருந்தார்.

பெரியாழ்வார், நாள்தோறும் கோதைக்கு கண்ணனின் குழந்தைப் பருவ குறும்புகள் முதல் அவரது ஒவ்வொரு அருட்செயல்களையும் கதையாய்க் கூறுவார். இதனால் இறைவனைப் பற்றிய சிந்தனையே இறைவியின் உள்ளத்தில் பசுமரத்தாணிப் போல் பதிந்து, தன் ஒவ்வொரு அசைவிலும் இறைவன் இருப்பதை இதயப்பூர்வமாக உணர்ந்தார்.

cow boy ன் கண்பட்டதும்,
play boyன் கதை கேட்டதும்,
உண்டான love ஆனது,
உள்ளூற பிறை யானது....

காலப்போக்கில், கோதையின் பக்தி, காதலாக மலர்ந்தது. கோதை வளர, வளர, ''தான், அந்த அழகிய கண்ணனுக்கு, தன் காதல் தலைவனுக்கு ஏற்ற துணையாய் இருக்க முடியுமா?'' என்று யோசிக்க ஆரம்பித்தார். 

காதலும் கள்ளத்தனமும் இரட்டைக் குழந்தைகள் இல்லையா! அதுபோலவே கோதையும், இறைவனுக்குச் சூட்டுவதற்காக, பட்டர்பிரான் கோர்த்து வைத்திருந்த பூமாலையை, தன் தந்தைக்குத் தெரியாமலேயே எடுத்து அணிந்து கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்துக் கொள்வார்.

கண்ணாடியில் தன் மணக்கோலம் தெரியுமோ? இல்லை, மனத்திற்குள் இருக்கும் மன்னவனின் திருக்கோலம் தெரியுமோ? அவர் கண்ணாடியில் தான் காணும் அழகைக் கண்டு, முகம் சிவந்து மெய் மறந்து நின்றுவிடுவாள். பின் சுய நினைவு வந்தவளாய், தன்னுள்ளே மெல்லியதாய் நகைத்து, மீண்டும் மாலையை எடுத்தது எடுத்தபடி, எவருக்கும் அறியாமல் அப்படியே வைத்துவிடுவாள் அந்த அப்பாவி சிறுமி.

அது சரி, கோதை மட்டும் பூமியிலே பிறந்து, மங்கையாய் மண்ணிலே அந்த மச்சக்காரனை (மச்சாவதாரத்தானை) நினைத்து நினைத்து உருகுகிறாளே, ஆனால் நாராயணனைக் காணோமே! அப்படின்னா, கோதை என்னா, ஒரு தலை ஃபீலரா??? ...

கோதையின் காதலும் வளர்ந்தது; கள்ளத்தனமும் தொடர்ந்தது..... ஒரு நாள், மாதவனுக்கான மாலையில் மங்கையின் முடி ஒன்று இருப்பதைப் பார்த்துப் பதறினார், பெரியாழ்வார்.

இறைவனுக்கான சேவையில் எவ்விதக் குறையும் இருக்கக் கூடாது என்று, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மலராய் தானே பறித்து, அவற்றைப் பக்குவாய் புணைந்திருந்தும், அதில் எவ்வாறு பிழை ஏற்பட்டது என்று மனம் பதை பதைத்தார்.

உடனே அவர் அதைக் கண்டறிய வழக்கம் போல், தன் வழக்கமான இடத்தில் மாலையை வைத்து விட்டு மறைந்து நின்று கவனிக்கையில் கள்வனின் காதலியின் கள்ளத்தனம் வெளிப்பட்டுவிட்டது.

உடனே அவர், கோதையைக் கடிந்து கொண்டு, மீண்டும் புதியதொரு மாலையை மாளவனுக்கு அணிவித்தார்.ஆனால் இறைவன் அதை ஏற்கவில்லை....

திருடிய கனிதானே தித்திக்கும்.... திருடியின் திருக்கரம் பட்ட மாலைதான் கள்வனுக்குத் தித்திக்கும். அதனால், அன்று இரவில் கனவிலே, யார் கனவிலே?.....

பெரியாழ்வாரின் கனவிலே பெருமாள் தோன்றி, தனக்குக் கோதையின் மாலையை அணிவித்தாலே பிடி என்று பிடிவாதம் பிடித்தார். பெரியாழ்வாரும் மகிழ்ந்து அதன்படியே நடந்தார்.

'சூடித் தந்த சுடர்க் கொடியான' கோதை, குமரியானதும் பெரியாழ்வாருக்கு வந்தது பெர்ர்ரிய வேலை. சாதாரண மானிடர்கள் யாரையும் தான் கல்யாணம் கட்டிக்க மாட்டேன். மணந்தால், அந்த மாளவனைத்தவிர வேறு யாரையும் தன் மனதாலும் நினைக்க மாட்டேன் என்று கோதையும் இங்கு அடம் பிடிக்க..... இப்பொழுதும் பெரியாழ்வாருக்கு பெரிய கவலை....

108 கோயில்ல சீனிவாசன் வாசம் செய்யும் பொழுது, எந்த தலத்திலிருக்கும் தலைவனுக்குத் திருமணம் முடிப்பது என்று....

மீண்டும், நம்ம திருவரங்க நாதர், பெரியாழ்வார் கனவிலே தோன்றி, 'கோதையை மணக்கோலத்துடன் என் சந்நிதிக்கு அழைத்து வரவும். அங்கே நான்
அவளை ஏற்றுக் கொள்வேன்', என்று கூறினார்.

அதன்படியே, பெரியாழ்வாரும் ஒரு நல்ல சுபமுகூர்த்த நாளில் கோதையை மணப்பெண்ணைப் போல் அலங்கரித்து, சுற்றமும் நட்பும் சூழ பல்லக்கிலே ஏற்றி, திருவரங்கப் பெருமானிடத்தில் வந்து சேர்ந்தனர்.

அங்கே திருவரங்கப் பெருமானுடன் ஆண்டவள் சங்கமம் ஆனாள்.

சூடித்தந்த நாச்சியாரான கோதை, இறைவன் மேல் பக்திச் சுவைச் சொட்டச் சொட்ட பாடிய பாசுரங்கள் இரண்டு; அவை,

திருப்பாவை 30 பாசுரங்கள் 
நாச்சியார் திருமொழி 143 பாசுரங்கள்.

திருப்பாவை:

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைத்தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.

ஐயைந்தும் - 5*5 = 25
ஐந்தும் - 5 (25+5 = 30). இந்த 30 பாசுரங்களும் மார்கழி மாதம் 30 நாட்களும் அதிகாலையிலே பாடப்படுகின்றன.
ஓம் நமோ நாராயணாய நம!!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!!

பெரியாழ்வார்

பெரியாழ்வார்:காலம் - 7 ம் நூற்றாண்டு ( 700 - 785)
ஆண்டு - உருத்ரோண வருடம்
மாதம் - ஆனி
நட்சத்திரம் - (ஞாயிற்றுக் கிழமை) சுவாதி
திதி - ஏகாதசி
அம்சம் - கருடன்
பெற்றோர் - முகுந்தாச்சார்யார்; பதுமையார்.

பெரியாழ்வாரின் இயற்பெயர் திரு ராம ஆண்டான் என்பதே ஆகும். ஆனால், இவர் எப்பொழுதும் வடபெருங்கோயிலுடைய எம்பெருமான் நாராயணனையே சிந்தையில் கொண்டிருந்ததனால் இவர் விஷ்ணுசித்தர் என்று அழைக்கப்பெற்றார்.

சிறுவயதில் அவர் வேதங்கள் பயில்வதை விட இறைவனுக்குத் தொண்டு புரிவதிலேயே அதிக நாட்டம் கொண்டவராயிருந்தார். அவர் எம்பெருமானுக்கு பூமாலைகள் சூட்டி அழகு பார்ப்பதிலேயே தன் சித்தம் செலுத்தினார்.

அது சரி இவருக்கு சின்ன வயசுலேயே ஒன்னுக்கு ரெண்டு பேரு இருக்கு, அப்புறமும் ஏன் இவர எல்லாரும் பெரியாழ்வார், பெரியாழ்வார் ன்னு அழைக்கிறாங்க?

அதுவும் சரி, அது என்ன பன்னிரண்டு ஆழ்வார்கள் இருக்கும் போது இவருக்கு மட்டும் பெரிய ன்னு அடைமொழி?
கல் தோன்றி மண் தோன்றா காலத்தும் முன் தோன்றிய மூத்த ஆழ்வார்கள் மூவர் உள்ளனர், அந்த முதல் ஆழ்வார்களுக்கும் இல்லாமல்,
கடவுளே ஆழ்வாராக வந்துள்ளார் என்று கருதப்பட்ட நம்மாழ்வாருக்கும் இல்லாமல்,
மண்ணுலக மக்களுக்கு இறைவனாய் இருக்கும் மன்னர் குலத்தோன்றலான குலசேகர ஆழ்வாருக்கும் இல்லாமல்,
சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாளுக்கும் இல்லாமல் நம் விஷ்ணு சித்தருக்கு மட்டும் ஏன் பெரிய ஆழ்வார் என்று அனைவரிலும் பெரியவராக அழைக்கும் வழக்கம்? அது ஏனென்றால்...

இந்த உலகத்தில ஒவ்வொருத்தரும் ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உடைய மனிதர்கள் வரைக்கும், ஏன் இந்த உலகையே உருவாக்கி, காத்து, தீயனவற்றை அழிக்கும் அந்த கடவுளர்களும் கூட இம்மண்ணுலகில் பிறந்து வளர உறுதுணையாய் அமையும், இம்மண்ணில் நடமாடும் கண் கண்ட தெய்வங்களாக வாழும், நாம் தொழும் தெய்வம் - தாய்!

எந்த உலகத்திலும், எக்காலத்திலும் தாய்க்கும், தாய்ப்பாசத்திற்கும் ஓர் அளவை அறுதியிட்டுக் கூற இயலாது. அத்தகைய தாய்ப்பாசத்தோடும், தன்னலமில்லாத அன்போடும், அவன் நலனை மட்டுமே எப்பொழுதும் இறைவனிடம் வேண்டும் இயல்புடையவர்.

மனம், சொல், சிந்தனை அனைத்திலுமே குழந்தையாய் எம் பிரானை நினைத்து, மிகுந்த அக்கறையோடு இருந்ததால் அவர் மற்ற ஆழ்வார்களை விட உயர்ந்தவராய் கருதப்படுகிறார்.

பெரியாழ்வார் வாழ்ந்த காலத்தில், பாண்டிய மன்னனான திருவல்லப தேவனுக்கு ஒரு ஐயம் எழுந்தது. அதாவது, நமக்கு இக்காலத்தில் எக்குறையும் இல்லாமல் வாழத் தேவையான செல்வங்கள் அனைத்தும் இருக்கின்றன. அடுத்த பிறவியிலும் நாம் சுகமாக வாழ என்ன செய்ய வேண்டும்? என்று தன் குருவிடம் வினவினார்.

அவராலும், அரண்மனையிலிருந்த எவராலும் இக்கேள்விக்கு சரியானதொரு பதிலை அளிக்க இயலவில்லை. எனவே மன்னனின் குலகுருவான செல்வநம்பி, நாம் நாட்டிலுள்ள ஆன்றோர்கள் முன்னிலையில் இக்கேள்வியினை வைப்போம். அவர்களுள் சரியான பதிலை அளிப்பவர்களுக்கு நாம் பொற்காசுகளைப் பரிசாக அளிப்போம் என்று கூறினார்.

அதன்படியே மறுநாளே, போட்டி அறிவிக்கப்பட்டது. அன்று இரவு இறைவன் பெரியாழ்வாரின் கனவில் தோன்றி, 'பொற்கிழியை அறுத்து வா' என்று ஆணையிட்டார்.
மறுநாள் இறைவனின் ஆணைப்படி, மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார், பெரியாழ்வார். மன்னன் அவர் முகத்தில் தெரிந்த பேரொளியை அறிந்து கொண்டு, இவரே தன் கேள்விக்கு சரியான பதிலை அளிக்கக் கூடியவர் என்று உணர்ந்து கொண்டு அவரை முன் சென்று வரவேற்றார்.

அவரிடம், 'ஐயா, நாம் மறுபிறவியில் துன்பமின்றி வாழ என்ன செய்ய வேண்டும்' என்று வினவினார்.

அப்பொழுது பெரியாழ்வார் கூறிய பதிலாவது, '
ஒருவருக்குப் பிறவி என்பதே துன்பமானது.
நாம் இப்பிறவியில் நன்மைகள் செய்தாலும் சரி, தீமைகள் செய்தாலும் சரி அவற்றை அனுபவிக்க நமக்கு பிறவி என்பது வந்து கொண்டேயிருக்கும்.எனவே துன்பமின்றி வாழ வேண்டுமானால், நாம் பிறவியின்றி வாழ வழி செய்ய வேண்டும்.

பிறவியின்றி வாழ, நாம் செய்வது நன்மையோ, தீமையோ அதை இறைவனின் பெயரால் செய்து அதன் முழுபலனையும் முதலும் முடிவும் இல்லாத யுகம் யுகமாய் அண்டசராசரம் அனைத்தையும் ஆட்சி புரியும் பெருமாளின் பொற்பாதத்திலே ஒப்படைத்துவிட வேண்டும்.

''நம் அனைவரையும் கண் பார்வையாலேயே மயக்குபவன், மாலவன்- திருமால் அவன். அவன் ஒருவனே நம் பாவ, புண்ணியங்களைப் போக்கி, உலகவாழ்வின் மயக்கத்தை நீக்குபவன்'' என்பதை தெள்ளத்தெளிவாய், வேதங்களில் உவமானம் கொண்டு எடுத்துக் கூறினார், பெரியாழ்வார்.

நாம் மட்டும் இறைவனின் திருவடிகளை சரணடைவதைவிட, நம் செயல்களையும் அவன் பொற்பாதம் பணித்துவிட வேண்டும்.' என்று கூறினார். உடனே, அந்த பொற்கிழி வளைந்து வந்து அவர் கைகளை எட்டியது. அங்கிருந்த அனைவரும் ஆழ்ந்த வியப்புடன் ஆழ்வாரைப் பார்த்தனர்.

மன்னர் மிகவும் மகிழ்ந்து, பெரியாழ்வாருக்கு பட்டர்பிரான் என்று பட்டமளித்து, அவரை, மக்கள் அனைவரும் பார்க்கும் வண்ணம், பொன்முடிப்புடன் யானையின் மேலேற்றி, நகர் வலம் வரவழைத்தார். இக்காட்சியைக் காண, கருட வாகனமேறி, சங்கும் சக்கரமும் தன் இரு தோள்களிலும் ஏக, திருமகளைத் தன் வலமார்பிலே தாங்க, தேவர்கள் அனைவரும் துதிக்க எம்பெருமான் காட்சித்தந்தார்.

இவ்வருங்காட்சியை மக்கள் அனைவரும் கண்டனர். அதைப்பார்த்த பெரியாழ்வார், மனம் பதைபதைத்தார். தன் பிள்ளை மேல் கண்ணேறு ஏதும் பட்டுவிடுமோ என்று அஞ்சி, உள்ளம் துடித்தார். உடனே மக்கள் அனைவரின் கவனத்தையும் திருப்பும் வண்ணம் இறைவன் மேல் திருப்பல்லாண்டு, பாடினார். மக்களும் அவருடன் இணைந்து பல்லாண்டு பாடத் துவங்கினர்.

'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல்கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வித்திருக்காப்பு
அடியோமொடும் நின்னொடும்
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்
அப்பாஞ் சன்னியமும் பல்லாண்டே!

அப்பாடா, இந்த பாசுரத்தைப் படிக்கற நமக்கே, பெருமாள் மேல கண்ணு வெச்சுடுற மாதிரி இருக்கே, அப்போ பாக்குறவங்க கண்ணுலாம் எப்படி இருந்து இருக்கும். அதை எல்லாம் நேர்ல பாக்குற ஆழ்வாருக்கு மனசு எப்படி வலிச்சுருக்கும். இந்த வலி தான் அவரை மற்ற ஆழ்வார்கள் கிட்ட இருந்து உயர்த்திக் காட்டுனது.

இவர் இறைவனுக்கு மட்டும் தாயாய் இருக்கவில்லை. அவர் துணைவியாருக்கும் (கோதை) தாயுமானவர்.

பாண்டிய நாட்டில் அவர் பெற்ற பரிசினை வடபெருங்கோயிலுடையானுக்கு (திருப்பதிக்கு) அளித்து விட்டு, வழக்கம் போல் இறைவனுக்கு மலர் கைங்கரியம் செய்வதைத் தொடர்ந்தார், பெரியாழ்வார்.
அன்பும், பக்தியும், பாசமும் சொட்ட சொட்ட பெரியாழ்வார் அருளியவை,

1.திருப்பல்லாண்டு
2.பெரிய ஆழ்வார் திருமொழி ஆகியன ஆகும். அது மட்டுமல்லாமல் பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கிய மரபைத் தோற்றுவித்தவர், பெரியாழ்வார்.

பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டுதான் பாசுரங்களில் முதலாவதாகப் பாடப்படுவதாகும்.

ஓம் நமோ நாராயணாய நம!!
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!!

Wednesday, April 9, 2008

குலசேகர ஆழ்வார்

குலசேகர ஆழ்வார்

பிறந்த காலம் - கி.பி. 8 ம் நூற்றாண்டு ( 750 - 780)
இடம் - திருவஞ்சிக்களம்(கேரளம், திருச்சூர் அருகில்)
ஆண்டு - பிரபவ
மாதம் - மாசி
திருநட்சத்திரம் - புனர்பூசம்(புனர்வசு, வெள்ளிக்கிழமை)
அம்சம் - கௌஸ்தூபம்(பெருமாள் அணியும் இரத்தின மாலையின் அம்சம்)


குலசேகராழ்வார் இவரை ஆழ்வார் என்று அழைப்பதைவிட குலசேகர பெருமாள் என்று அழைப்பதே மிகவும் பொருத்தமானது ஆகும்.

'சிங்க மராத்தியர்தம் கவிதைக் கொண்டு, சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்' என்னும் பாடலைக் கேட்டிருப்பீர்கள். அங்கு யானைத்தந்தம் மட்டுமல்ல மாலின் மாலையாய் ஒரு மன்னவனும் அவதரித்துள்ளார். யார் அவர்? நம் குலசேகரப் பெருமாள் தான்!

நம் குலசேகர பெருமாள் சாதாரண மாந்தராய் மண்ணில் பிறக்கவில்லை. அவர் மூவேந்தர்களில் ஒருவரான சேரப் பேரரசின் செல்வக் குமரனாய் அவதரித்தார். அவர் சிறுக்குழந்தையாய் இருந்த போது.....

என்ன! இவர் வாழ்விலும் ஏதேனும் அதிசயமா...?

ஆமாம்! என்ன அதிசயம்... !அரச குடும்பத்தில் பிறந்த இவர், மன்னனாய் இருந்தோமா, மண்ணைக் கைப்பற்றினோமா.... என்று வாழாமல், அந்த மாலவனின் மனதைக் கைப்பற்ற எண்ணி வாழ்ந்த உத்தமர் அல்லவா இவர்! அதுவே மிகப்பெரிய அதிசயம் தானே!

பாலகனாய் இருந்த காலத்திலே இவர் வேதங்கள், வெவ்வேறு மொழிகள் என்று கல்விகேள்விகளில் சிறந்து விளங்கியதோடல்லாமல், வாள் வீச்சு, அம்பெய்தல், குதிரையேற்றம், யானை ஏற்றம், தேரோட்டல், கதை, கம்பு, சிம்பு என்று அனைத்திலும் அவர் வல்லவராய் இருந்தார். உரிய காலத்தில் அரச பதவியேற்ற இவர், செவ்வனே அரசாட்சி நடத்தி அனைவரின் அன்பையும் மதிப்பையும் பெற்றார். முகிலும் மாதம் மும்மாரி மாறாமல் பெய்து எல்லா நலமும், வளமும், செல்வமும் பெற்று சேரநாடு பொன்விளையும் பூமியாய் பொலிவுற்று விளங்கியது.

எல்லா அரசர்களையும் போல் எல்லைக் கைப்பற்றலிலே இவர் வாழ்வும் கழிந்தது. இவர் போர்க்களத்தில் சென்றால், வாகை மாலையன்றி வேறு எதையும் சூடமாட்டார். தன் தோள் வலிமையாலும், அறிவுக்கூர்மையினாலும், ஸ்ரீ ரங்கநாதரின் அருளினாலும் எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச்செய்தார். அவரைக் கண்டு பொறாமை கொள்ளாத மன்னர்களே இல்லை எனலாம். அவரது திறமையையும், பேராண்மையையும் கண்டு, பாண்டிய மன்னன் தன் மகளை அவருக்கு மணம் செய்து வைத்தார்.

மன்னன் குலசேகரருக்கு ஒரு ஆண்மகவும், பெண்பிள்ளை ஒன்றும் பிறந்தது. தன் மகனுக்கு திடவிரதன் என்று தன் தந்தையாரின் பெயரையேச் சூட்டினார். இவ்வாறு வீட்டையும், நாட்டையும் கருத்துடன் ஆண்டு வந்த குலசேகரருக்கு, போரில் பல உயிர்கள் இறப்பது அவருக்கு வெறுப்பை உருவாக்க ஆரம்பித்தது. அதனால், நாளாக நாளாக அரச வாழ்வில் விருப்பங்குறைய ஆரம்பித்தது.

எம்பிரான் இராமராசனின் வாழ்வியலிலும், மழலைக்கண்ணனின் கள்ளக் குறும்புக் கதைகளிலும் காலத்தைக் கழிக்க ஆரம்பித்தார்.

ஒவ்வொரு நாளும் பண்டிதர்களை அழைத்து, எம்பிரான் இராமனின் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அதில் தம்பி இலக்குவனனை சீதாப் பிராட்டிக்குக் காவல் வைத்து விட்டு, அசுரர்களை எதிர்க்கத் தனியே சென்றார், இராமர். இதைக்கேட்ட, குலசேகரர், தனியே இருக்கும் இராம்பிரானுக்கு அசுரர்களால் ஏதேனும் துன்பம் நேருமோ என்று அஞ்சி, தன் நால்வகைப்படைகளையும் இராமபிராணுக்குத் துணையாய் அனுப்ப எத்தனித்தார். அப்பொழுது, அந்த பண்டிதர், இராமர் ஒருவரேத் தனியாய் அவர்களை எல்லாம் வென்றுவிட்டார், என்று கூறி சமாதானப் படுத்தினார். அப்பப்பா, எத்துனை பக்தி! எவ்வளவு தூரம் அவர் அந்தக்கதைகளில் ஆழ்ந்திருந்தால் இவற்றை எல்லாம் செய்து இருப்பார் என்று பாருங்கள்.


அவரது பற்றும் பக்தியும் இத்துடன் நின்று விடவில்லை. அவர் இராமபிரானுக்காக ஒரு பொற்சிலையை நிர்மாணித்து, அதை தினமும் வழிபட்டு வந்தார்.


மன்னனின் நிலையை அறிந்த அவரது அமைச்சர்கள், இந்நிலை நீடித்தால், நாட்டின் நிலைமை மிகவும் மோசமாகி விடும் என்று எண்ணி, அவருக்கு ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மேலும், விஷ்ணு பக்தர்கள் மேலும் இருந்த மதிப்பையும் மரியாதையையும் அகற்றுவதற்கு ஒரு ஏற்பாடு செய்தனர். என்னவென்றால்,


ஒருநாள், அவர் அணுதினமும் பூசித்து, வணங்கி வழிபடும் ஸ்ரீ ராம பிரானின் திருவுருவ சிலையில் இருந்த நவரத்தின மாலை ஒன்று காணாமல் போய்விட்டது. அதை, விஷ்ணு பக்தர்கள் தான் எடுத்து விட்டனர் என்று, அவரது அமைச்சர் அவரிடம் உரைத்தார்.


இதைக்கேட்ட குலசேகரர், செந்தனலில் தன்னைச் சுட்டது போல் துடித்தார். ஒருநாளும் எம்பிரானின் பக்தர்கள் , வெறும் பொன், பொருள் மீது பற்று கொண்டவர்கள் அல்ல, என்று அவர் தீவிரமாக நம்பினார். உடனே அவர், கொடிய விடமுள்ள பாம்பு ஒன்றை ஒரு குடத்திலிடச்சொல்லினார். பின், "எம்பிரான் பக்தர்கள் அந்த மாலையை எடுத்திருந்தால், நானும் அப்பக்தர்களில் ஒருவன், ஆதலால் இக்குடத்திலுள்ள பாம்புத் தன்னைத் தீண்டட்டும்" என்று கூறிக் குடத்தினுள் தன் கையை விட்டார். ஆனால், அப்பாம்பு அவரை ஒன்றும் செய்யவில்லை.


அப்பொழுது, அவரது அமைச்சர், அந்த மாலையை எடுத்து மறைத்து வைத்தது, நாங்கள்தான்... இராமபிரானின் மீதான உங்கள் பக்தியை நீக்கவே அவ்வாறு செய்தோமென்று கூறி, அந்த மாலையைத் திருப்பிக் கொடுத்து, தம் தவற்றிற்கு மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டார்.


இதனால் மனம் நொந்த குலசேகரரும், தன் ஆட்சிப்பொறுப்பை மகன் திடவிரதனிடத்து ஒப்படைத்து விட்டு, இராமபிரானின் பல்வேறு புனிதத்தலங்களுக்கும் புனித யாத்திரை மேற்கொண்டு, பல்வேறு பாடல்கள் பாடினார்.

இராமபிரானைப் போலவே இவரும் திருவரங்க பெருமானை வழிபட்டார். இராமபிரானைப் பெருமாள் எனவும், திருவரங்கப் பெருமானை பெரிய பெருமாள் எனவும், திருவரங்கப் பெருமான் வீற்றிருந்த திருக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு, பெருமாளை மட்டுமே இவர் வணங்கியதாலோ என்னவோ, இவரும் குலசேகரப் பெருமாள் என்று அழைக்கப்பட்டார். குலசேகரப் பெருமாள், பெருமாள் மீது பக்திச்சுவைச் சொட்டச் சொட்ட பாடிய பாடல்கள் பெருமாள் திருமொழி ஆகும்.

குலசேகரப் பெருமாள் பாடிய பெருமாள் திருமொழி 105 பாசுரங்களைக் கொண்டது ஆகும். அது மட்டுமில்லாமல், அவர் கண்ணபிரானுக்காக, வட மொழியில் முகுந்த மாலை என்னும் பக்திப்பாடல் ஒன்றும் எழுதியுள்ளார். இதுல ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா, வடமொழியில பாட்டு எழுதின ஒரே ஆழ்வார் இவர்தான். ;-))

குலசேகர ஆழ்வார், சென்று வணங்கிய திருத்தலங்கள் எவைஎவை என்றால், திருவரங்கம்,
திருவேங்கடம்,
திருவித்துவக்கோடு,
திருஅயோத்தி,
திருக்கண்ணபுரம்,
திருசித்திரக்கூடம்.

திருச்சித்திரக்கூடம் என்பது எந்த ஊர்னு கேக்குறீங்களா? அது வேற எந்த ஊரும் இல்லை, நம்ம தில்லை நடராச பெருமான் வீற்றிருக்கும் திருச்சிதம்பரமேதான். ;-))

ஓம் நமோ நாராயணாய நம!!
குலசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம்!!

Friday, April 4, 2008

மதுரகவியாழ்வார்

மதுரகவியாழ்வார்

நம் மதுரகவியாழ்வார் அவதரித்த காலம் - கி.பி. 8 ம் நூற்றாண்டு ( 745 - 805)
இடம் - திருக்கோலூர்
ஆண்டு - ஈசுவர
மாதம் - சித்திரை
நட்சத்திரம் - சித்திரை(வெள்ளிக் கிழமை)
அம்சம் - வினதை (கருடன்)

நம் மதுரகவி ஆழ்வார் யாரென்று உங்களுக்கெல்லாம் நினைவிருக்குமென்று எண்ணுகிறேன். நம்மாழ்வாரின் மாணவன் தான் நம் மதுரகவியாழ்வார்.

'வைத்த மாநிதி பெருமாள்' வீற்றிருக்கும் திருக்கோலூர் என்னும் ஊரில், எந்நாளும், எப்பொழுதும் எம்பெருமானின் திருநாமத்தையே உச்சரித்து, அவர்பாலும், அவர்தம் அடியவர்பாலும் அன்பு செலுத்தும் அந்தணர் குலம் தோன்றிய மாணிக்கமே மதுரகவியாழ்வார் ஆவார்.

இவர்தம் சிறுவயதிலேயே சிறந்த பாடல்கள் இயற்றவும், கேட்போரின் செவியும் மனமும் குளிரும் வண்ணம் இனிய பாடல்களைத் தன் மதுரமான குரலில் பாடவும் வல்லவர். ஆனால், நிறைகுடம் ததும்பாது என்பதற்கேற்ப, நிரம்ப கற்ற இவருக்கு, நிலையற்ற இப்பூலோக வாழ்வின் மீது பற்றின்றி, எம்பெருமானின் திருப்பாதத்தைத் தேடிப் பற்றிக் கொள்ள புனித யாத்திரை மேற்கொண்டு, இந்தியாவில் உள்ள அனைத்து திருத்தலங்களுக்கும் சென்றார்.

கயா, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை ஆகிய ஊர்களுக்கெல்லாம் சென்று ஸ்ரீமன் நாராயணனைத் தரிசித்து, இறுதியாக அயோத்யா வை அடைந்தார். அங்கு அவர்தம் திருப்பயணத்தை முடித்துவிட்டு, தாம் பிறந்த ஊருக்கு வர புறப்பட்ட போதுதான், நம்மாழ்வாரிடம் அவரை அழைத்துச் சென்ற அந்த பேரொளியைக் கண்டார்.

அதன்பின் நடந்தவை உங்களுக்கே தெரியும். ஆமாம், நம் நம்மாழ்வாரை பார்க்க வைத்தது, அவரை பேச வைத்து அவரிடமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசுரத்தை திருவாய்மொழியாய் பெற்று, அவற்றிற்கு இனிய பண் அமைத்து, பாடியது எல்லாம் நம் மதுரகவியாழ்வாரே ஆவார்.

இவர் நம்மாழ்வாரைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டு அவர்மேல், கண்ணிநுண் சிறுத்தாம்பு என்னும் 11 பாக்களைக் கொண்ட பாடல் ஒன்றைப் பாடினார். இந்த கண்ணிநுண் சிறுத்தாம்பு என்னும் பாடல்தான், அந்த 4000 திவ்ய பிரபந்த பாடல்கள் என்னும் பொக்கிஷத்திற்கான திறவுகோல் ஆகும். இத்திறவுகோல் இல்லாவிடில், நமக்கு அந்த மகா பெரிய பொக்கிஷமே கிடைச்சிருக்காது, அது எப்படிங்கறத பின்னால சொல்றேன்... 'பின்'னால இல்ல... அப்பாலிக்கா சொல்றேன். ;-)

சிறந்த குரு பக்திக்கு, மதுரகவியாழ்வாரே சிறந்த எடுத்துக்காட்டு ஆவார். 'உண்ணும் சோறும், பருகும் நீரும், திண்ணும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே' என்று இருந்தவர் நம்மாழ்வார். ஆனால் மதுரகவியாழ்வாருக்கு எல்லாமும் நம் நம்மாழ்வாரே ஆவார். மதுரகவியாழ்வார், கடவுள் மேல் கொண்ட பக்தியைக் காட்டிலும், தன் குரு மேல் கொண்ட பக்தியே அதிகம். அவர் கண்ணிநுண் சிறுத்தாம்பு என்று துவங்கும் 11 பாசுரங்களைத் தன் குருமேல் அந்தாதி முறையில் பாடினார். 4000 திவ்ய பிரபந்தத்தில் நம்மாழ்வாரைப் பற்றி அமைந்த இந்த 11 பாடல்களும் இறைவனைக் குறிப்பவை அல்ல.

நம்மாழ்வாரை நாம் அழைக்கும், 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்னும் பெயர் மதுரகவியாழ்வார் அளித்ததே! அதோடு 'அளவில்லா ஞானத்து ஆசிரியர்' என்றும் தம் குருவை மதுரகவியாழ்வார் அழைத்தார்.

மதுரகவியாழ்வார், நமக்களித்தப் பேரருள் இத்துடன் முடிந்துவிடவில்லை. அவர் இன்னும் பலவும் செய்தருளியிருக்கிறார். நமக்கு நம்மாழ்வாரப் பத்தி ஓரளவுக்குத் தெரியும், ஆனா அவர் எப்படி இருப்பார் ன்னு யாருக்காவது தெரியுமா? அந்த பெரும் பாக்கியத்த நமக்கு அளித்தவர் மதுரகவியாழ்வார் தான்.

எப்படின்னு கேக்குறீங்களா? அதாவது, தம் குருவுக்காக அவர் ஒரு விக்ரகம் செய்து, அவருக்கு அணுதினமும் அபிஷேகம், ஆராதணை செய்து வணங்க வேண்டுமென்று எண்ணி, தாமிரபரணி ஆற்று நீரைக் காய்ச்சி ஒரு விக்ரகமும் செய்தார். ஆனால், என்ன நடந்தது என்றால், அந்த விக்ரகம் வேறு ஒருவருடையது. அப்பொழுது, நம்மாழ்வார், மதுரகவியாழ்வாரிடத்தில் கனவில் தோன்றி, 'இவ்விக்ரகம் தன்னுடையது அல்லவென்றும், இது பின்னாளில் வரப்போகும் ஸ்வாமி ராமானுஜரின்(பவிஷ்யத் ஆச்சார்யார்)விக்ரகம் என்று கூறினார். அதன் பிறகு, நம்மாழ்வாருக்குத் தனியாகப் புது விக்ரகம் செய்தார். இவை இரண்டும் இன்னும் இருக்கின்றன.

அதனால் மதுரகவியாழ்வார், ஆழ்வார்க்கடியன் என்று அழைக்கப்படுகிறார்.

எனக்கு ஒரு சந்தேகம், மதுரகவி என்னும் பெயர் மதுரகவியாழ்வாரின் உண்மையான பெயரா? இல்லை வழங்குப் பெயரா? நான்கு வகை(ஆசுகவி, சித்திர கவி, விஸ்தார கவி, மதுரகவி)கவிகளில் ஒன்றுதான் மதுரகவி! அதான் ஒரு சின்ன டவுட்.

அப்படின்னா விகடகவி ன்னா என்னான்னெல்லாம், குறுக்கால கேட்கப்படாது! விகடகவி என்பது கவிஞரைக் குறிக்கும் சொல் அல்ல. அது நகைச்சுவையாய் பேசி, வினையாடுபவரைக் கூட குறிக்கும்.... ;-)

ஓம் நமோ நாராயணாய நம!!
மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்!!

Thursday, April 3, 2008

நம்மாழ்வார்

நம்மாழ்வார்:
அடுத்ததாக நாம பார்க்கப் போறது, நம்ம ஆழ்வார்.
யார்ரா அது நம்ம ஆழ்வார்?

அவர்தாங்க நம்மாழ்வார்.
அது தெரியுது. யாரு அந்த நம்ம ஆழ்வார்?

நான் சொன்னது நம்ம ஆழ்வார் தான், ஆனா நம்மாழ்வார்.
ஏன்டா, காலங்காத்தாலே வந்து கழுத்தறுக்குற. சொல்ல வந்தத ஒழுங்கா சொல்லு.

நான் ஒழுங்காத்தான் சொல்றேன். நம்மாழ்வார்.... நம்மாழ்வார்... நம்மாழ்வார்.... இப்பவாவது புரியுதா?
ம்..... புரிஞ்சு போச்சு, எனக்கு புரிஞ்சு போச்சு... வேதம் தமிழ் செய்த மாறன், சடகோபன் அப்படின்னு ல்லாம் சொல்வாங்களே, அவரைத்தானே சொன்னேன்.

அப்பாடா! ஆமாம் பா, ஆமாம். அவரேதான்...
ம்.. ம்... சொல்லு கேப்போம்!

நம்மாழ்வார்

பிறந்த காலம் - 7 ம் நூற்றாண்டு(765 - 800)
ஆண்டு - பிரமதி
மாதம் - வைகாசி
நட்சத்திரம் - விசாகம் (வெள்ளிக் கிழமை)
அம்சம் - சேணைத்தலைவர் (விஸ்வக் சேணர்)

நம்மாழ்வார், ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டாருப்பா. இல்லாங்காட்டி, அவர் த்வாபர யுகத்துல பிறந்துருப்பார். நம்மாளு கிருஷ்ணன நேர்லயே பாத்து, 'ஹாய்' சொல்லியிருப்பார். அது சரி, அந்த கிருஷ்ணனே இங்க வந்து ஆழ்வாரா பிறக்கும் போது, எப்படி த்வாபர யுகத்திலயே மறுபடியும் பிறக்க முடியும்! ;-)

நம்மாழ்வார், பிறந்தது கலியுகத்தின் ஆரம்ப காலத்தில். கரியர், உடைய நங்கையார் என்போரது திருமகவாய், பாண்டிய நாட்டிலுள்ள ஆழ்வார் திருநகரி என்னும் ஊரில், அதாவது திருக்குருகூரில் பிறந்தார். இவரது பிறப்பே, ஒரு அதிசய பிறப்பாகும்.

ஆண்டவன் இருக்குற இடத்துல அதிசயம் ந்டக்காம இருந்தாதான் அதிசயம். அப்படி இருக்கும் போது, ஆண்டவனின் அவதாரங்களாக, அவதரித்த ஆழ்வார்கள் வாழ்வில் அதிசயம் நடப்பது என்பது சகஜம் தானே.

நம்மாழ்வார் வாழ்க்கையில் என்ன அதிசயம் நடந்தது ன்னா, அவர் பிறந்த கணம் முதல், ஒருமுறை கூட, கண்ணைத்திறக்கவும் இல்லை, உணவும் உண்ணவில்லை, வாய் திறந்த அழக்கூட இல்லையாம். சமத்துப் பையன் இல்ல... ;-)

இதனால் கலக்கமுற்ற அவர்தம் பெற்றோர், அவரை திருக்குருகூரில் வீற்றிருக்கும், ஆதிநாதர் திருக்கோயிலிலுள்ள, இறைவனின் திருவடிகளில் சமர்ப்பித்துவிட்டனர். இயல்பான நிலையிலிருந்து மாறி பிறந்ததனால், அக்குழந்தையை மாறன் என்று அழைத்தனர்.

அதன்பிறகு, அக்குழந்தை தவழ்ந்து சென்று, அங்கிருந்த புளியமரப்பொந்தில் தியான நிலையிலேயே அமர்ந்து கொண்டது.

அந்த புளியமரம் யாருன்னு யோசிச்சீங்களா? அம்மரம் வேறு யாருமில்லை. நம் ஆதிசேஷனேதான்.

பதினாறு ஆண்டு காலம், நம்மாழ்வார் இந்த மோன நிலையிலேயே தான் இருந்தார்.

அதன்பிறகு, வட நாட்டில், அதாவது அயோத்தியில், மதுர கவியாழ்வார் - இவரும் நம் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரே! தங்கி இருக்கையில் ஒரு புது விதமான பேரொளியைக் கண்டார். அவ்வொளி, தென்திசையில் இருந்து வருகிறது என்பதை அறிந்து, தென்னகத்தை நோக்கிப் பயணித்தார்.

அவர், தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீரங்கத்திலுள்ள கோவிலிலிருந்து அந்த ஒளி வருகிறது என்று எண்ணி, மதுரகவியாழ்வார், திருவரங்கத்தை அடைந்தார். ஆனால், அந்த ஒளி மேலும் தென்திசையில் இருந்து வந்தது. எனவே, அவ்வொளி வந்த திசையை நோக்கிச் சென்ற போது, அது நம்மாழ்வார் வீற்றிருந்த புளியமரத்தை அவருக்குக் காட்டியது.

வயோதிகரான மதுர கவியாழ்வார், அச்சிறுவனைப் பார்த்த மாத்திரத்திலே, அவனை இறைவனின் அவதாரமாகக் கண்டுவிட்டார். அவர், நம்மாழ்வாரைப் பேச வைப்பதற்காக, அவரிடத்தில் இவர் ஒரு புதிர் போட்டார்.

அந்த புதிர் என்னவென்றால்,

செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்,
எதைத் தின்று? எங்கே கிடக்கும்?


இக்கேள்வியைக் கேட்டவுடன், ஞானக் கொழுந்தான நம்மாழ்வார், முதன் முறையாகத் தன் திருவாய் திறந்து, விடை பகன்றார்.

அவருரைத்த பதிலாவது,

அதைத் தின்று; அங்கே கிடக்கும்.

அதாவது, செத்தது என்பது நம் உடல்; சிறியது என்பது உயிர். உயிரானது உடலினுள் இருக்கும் பொழுது அதற்கென்று தனியான இன்பம், துன்பம் எதுவும் கிடையாது. உடல் நொந்தால், உயிரும் நோகும்; உடல் இன்புற்றால், உயிரும் அப்படியே இன்புறும். அதனால், உயிரானது உடலின் இன்ப, துன்பங்களைத் தின்று, அங்கேயே இருக்கும்.

என்று, அந்த உயிர் உண்மையை(தன்னிலை அறிதல்) உணர்கிறதோ, அன்று அது இறைவனைப் பற்றிய எண்ணங்களையே உணவாக உண்டு, அவரது திருவடி நிழலிலே நீங்கா நிலைத்துவிடும்.

இதுவே, அந்த புதிரில் பொதிந்திருந்த பொருள். பாத்தீங்களா, எவ்வளவு அழகா, ரெண்டே வார்த்தையில, தெள்ளத் தெளிவா தெளிய வெச்சுட்டார், நம்மாழ்வார். அதுக்காத்தான் ஞானம் வேணும் கிறது.

ம்... சரி நம்ம சங்கதிக்கு வருவோம். இந்த பதில கேட்டதும், நம்ம மதுரகவியாழ்வாருக்கு, உச்சி குளிர்ந்து, உண்மை விளங்கிப் போனது. அப்பதிலால் ஈர்க்கப்பட்ட மதுரகவியாழ்வார், அந்த கணமே நம்மாழ்வாரின் திருப்பாதத்தில் விழுந்து வணங்கி, 'என்னைத் தங்கள் சீடனாக ஏற்று, இப்பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க அருள் புரிவாய், ஐயனே' என்று வேண்டினார்.

நம்மாழ்வாரும், மதுரகவியாழ்வாரைத் தன் சீடனாக ஏற்று அருள் புரிந்தார். அது மட்டுமல்லாது, நம்மாழ்வார் பாடும் பாசுரங்களை எல்லாம் ஏட்டுச்சுவடியில் எழுதியவரும், அதை மதுரமான இசையில் பாடியவரும் நம் மதுரகவியாழ்வாரே. ஆனால், அதற்கு பிறகும் கூட, நம்மாழ்வார் அந்த இடத்தை விட்டு நகரவேயில்லை.

அது சரி, நம்மாழ்வார்தான் இருந்த இடத்தை விட்டு எங்கேயுமே போனதில்லை. பின்ன எப்படி பாசுரங்கள் ல்லாம் பாடினாரு? பாசுரம் ங்கறது, எம்பெருமானின் 108 திவ்ய தேசங்கள பத்தினதாச்சே!

எம்பிரானின் அவதாரம் தானே நம்மாழ்வார், அவருக்கே அவர் இருக்கின்ற இடங்கள் எல்லாம் தெரியாதா, என்ன? நம்மாழ்வார், திருவாய் திறந்து பாசுரங்களை எல்லாம் பாடத்துவங்கின போது, மகாவிஷ்ணு, அன்னை லெட்சுமி தேவியுடன், தன் கருட வாகனத்தில் காட்சியளித்தனர். அது மட்டுமல்லாமல், திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தும் அவர் மனக்கண்ணில் தோன்றின. என்ன ஒரு மகிமை பாருங்கள்!

நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 1000 க்கும் மேற்பட்ட பாடல்கள் நம்மாழ்வாரால் பாடப்பெற்றவை ஆகும். அவரது திருமொழிகள் மொத்தம் 4 ஆகும். அவை,

திருவிருத்தம் - இது 100 பாசுரங்களைக் கொண்டுள்ளது. இந்நூலில், அவர் ரிக் வேதத்தினுடைய சாராம்சங்களை அமைத்துள்ளார்.

திருவாசிரியம் - இந்நூல் மிகக் குறைவான பாடலைக் கொண்டுள்ளது. அதாவது 7 பாடல்கள் உள்ளன. இதில் யசூர் வேதத்தின் அம்சங்களைக் கொடுத்தருளியிருக்கிறார்.

பெரிய திருவந்தாதி - இதில் 87 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களில் அதர்வண வேதத்தின் கருத்துகளை ருசிக்கலாம்.

விருத்தம், ஆசிரியம், அந்தாதி ஆகிய மூன்றும், ஒரு வகையான செய்யுள் ஆகும. அவை இறைவனின் பெயரில் பாடப்பெற்றவையால், அவற்றிற்கு திரு என்னும் அடைமொழி சேர்த்து திருவிருத்தம், திருவாசிரியம், திருவந்தாதி என்று அழைக்கப்படுகின்றன.

திருவாய்மொழி - இதில் 1102 பாடல்கள் உள்ளன. இவற்றில் சாம வேதத்தின் சங்கதிகளை சுவைக்கலாம்.

இவ்வாறு, ரிக், யசூர், சாம, அதர்வண என்னும் 4 வேதத்தினையும், தமிழில் படைத்து, தமிழ் மக்களும் வேதத்தின் அர்த்தங்களைப் புரிந்து அதன் பலனை அடைய அருளிச்செய்ததினால், நம்மாழ்வார, 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று அழைக்கப்படுகின்றார். இவரது பாடல்கள் அனைத்திலும் வேதத்தின் சாரம் செறிந்து இருப்பதை, அவரது பாடல்களை உளமார ஓதும் வேளையில் உணரலாம். இவர், இறைவனை தலைவனாகவும், தன்னை தலைவியாகவும் வைத்து பாடினார்.

நம் மாறன், இப்படியே இறைவனைப் பற்றிய இன்சிந்தனையோடு 35 ஆண்டு காலம் இப்பூவுலகில் வாழ்ந்து வந்தார். அதன் பிறகு இவர் விருப்பத்திற்கிணங்க, இறைவனும் வைகுண்ட ஏகாதசி அன்று இவருக்காகவே சொர்க்கவாசலைத் திறந்து வைத்திருந்து, நம்மாழ்வாரைத் தம்மொடு இரண்டறக் கலக்கச் செய்துவிட்டார்.

ஓம் நமோ நாராயணாய நம!!
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!!

Monday, March 31, 2008

திருமழிசையாழ்வார்

திருமழிசையாழ்வார்



பிறப்பு - கி.பி. ஆறாம் நூற்றாண்டு (520 - 620)

இடம் - திருமழிசை

மாதம் - தை

நட்சத்திரம் - மகம்



உங்களுக்கெல்லாம் இவரோட நண்பர் யாருன்னு தெரியுமா? கூட படிச்சவங்களா? இல்ல. பின்ன, பக்கத்து வீட்டுப் பையனா? இல்ல. வேற யாரா இருக்கும்?! தெரியலயா.... நான் சொல்றேன். இவரோட ப்ரெண்ட் பைவ் ஹெட் பாம்பு பெட்ல பள்ளி கொள்வாரே ஒருத்தர் அவர்தான் இவரோட ஃப்ரெண்ட்.



திருமழிசை என்னும் ஊரில் பார்கவ முனி என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் புத்திர பாக்யம் வேண்டி யாகம் இயற்றி, அதன் பலனாக அவர் மனைவியும் கருவுற்றார். வழக்கத்திற்கு மாறாக, 12 மாத கர்ப்ப காலத்திற்குப் பிறகு, முழுமையற்ற நிலையில் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு கை, கால் போன்ற உறுப்புகள் இல்லாமல் இருந்ததால், அதை ஒரு மூங்கில் புதரில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அவர்கள் சென்ற பின்பு, அன்னை மகாலெட்சுமி, அய்யன் விஷ்ணுவுடன் வந்து அக்குழந்தையை எடுத்து ஆசீர்வதித்து விட்டுச் சென்றனர். அவர்களின் அருளால் அக்குழந்தை ஞானமும், முழு வடிவமும் பெற்றது. அவரது வலது கால் கட்டை விரலில் கூடுதலான ஒரு கண்ணும் இருக்கும்.



அவர்கள் சென்ற பின், அவ்வழியே வந்த ஹரிஜன இனத்தைச் சேர்ந்த திருவாளன் என்பவர், ஸ்ரீமன் நாராயணின் பஞ்ச ஆயுதங்களில் ஒன்றான சுதர்சன சக்கரத்தின் அம்சமான அக்குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அக்குழந்தையைக் கண்டவுடன் அவரது மனைவியார் பங்கயச்செல்வி மிகவும் மகிழ்ந்து, தங்களின் குழந்தையற்ற குறையை நீக்கவே இக்குழந்தை வந்தது என்று எண்ணி அக்குழந்தையை வளர்க்க முடிவு செய்தனர். அவர் துணைவியார், அக்குழந்தைக்கு பாலமுது கொடுக்க முயன்ற போது குழந்தை, உணவு உண்ண மறுத்து விட்டது. பல நாள்கள் உணவு உண்ணாமல் இருந்தும் அதன் உடல்நிலை எவ்வித மாறுதலும் இன்றி, நன்றாகவே இருந்தது. இவ்வதிசயமான சம்பவம், ஊர் முழுவதும் பரவி, பலர் அக்குழந்தையைக் காண வந்து சென்றனர்.



ஒரு நாள், குழந்தை பாக்கியமற்ற, வயது முதிர்ந்த தம்பதியர் வந்து அக்குழந்தையைக் கண்டனர். அவர்கள் குழந்தைக்கு, பாலமுது கொடுத்த போது அக்குழந்தை அதை ஏற்றுக் கொண்டது. ஒருநாள், முதியவர் ஒருவரும் வந்து அக்குழந்தையைக் கண்டார். அக்குழந்தையின் முகத்தில் தெரிந்த ஞான ஒளியைக் கண்ட அவர், இது எம்பிரான் அருள் பெற்ற, தெய்வக்குழந்தை என்று குறிப்பிட்டு, அக்குழந்தை மிச்சம் வைக்கும் பாலை, அந்த வயது முதிர்ந்த தம்பதிகள் உண்டால் அவர்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும் என்றும் கூறினார். அதைப் போலவே, அவர்களும் செய்து, ஒரு ஆண்மகவை ஈன்றனர். அக்குழந்தைக்கு கனி கண்ணன் என்று பெயர் சூட்டினர்.



கனி கண்ணன், வேதங்கள், சமய நூல்கள் அனைத்தும் நன்கு கற்றான். அவன் திருமழிசை ஆழ்வாரின் நெருங்கிய நண்பனாகவும், நாளடைவில் அவரையே குருவாகவும் ஏற்றுக்கொண்டான்.



திருமழிசையாழ்வார், திருவல்லிக்கேணியில் முதல் ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரை சந்தித்தார். சைவம், வைணவம், பௌத்தம் உள்ளிட்ட பல சமய நூல்களையும் கற்ற திருமழிசையாழ்வாருக்கு, இறைத்தத்துவத்தைப் பற்றிய குழப்பம் ஏற்பட்டது. அதை நீக்கி வைணவப்பேரொளியை அவர் மனத்தில் விதைத்தவர் நம் பேயாழ்வாரே ஆவார். பேயாழ்வார், திருமழிசையாழ்வாருக்கு, பக்தி சாரர் என்னும் திருப்பெயரிட்டு அழைத்தார்.



அதன்பின், திருமழிசையாழ்வார் பல திருத்தலங்களுக்குச் சென்று ஆனந்தக்கண்ணனைக் கண்ணார தரிசித்து, திருவேக்கா என்னும் ஊரை வந்து அடைந்தார். திருவேக்கா - இந்த ஊர் யாருக்காவது நினைவிருக்கா. சரியாகச்சொன்னீர். நம் பொய்கையாழ்வார் பிறந்த அதே திருவேக்காதான். அங்கு சென்று, பொய்கையாழ்வாரைக் கண்டெடுத்த அதே யதோத்தகிரி சன்னதியில் தியான நிலையில் இருந்தார்.



அங்கு, அவருக்குப் பொறுப்பாக அனைத்துப் பணிவிடைகளும் செய்த ஒரு மூதாட்டியின் அன்பிற்கு மெச்சி, அவருக்கு ஒரு வரம் அளிப்பதாகக் கூறினார். அதைக்கேட்ட அம்மூதாட்டி, தனக்கு இந்த வயோதிகத் தோற்றம் பிடிக்கவில்லை என்றும், தான் என்றும் இளமை மாறாத அழகிய இளம்பெண்ணாக இருக்க வரம் தந்தருள வேண்டும் என்று வேண்டினார். அவர் வேண்டுதலைக் கேட்ட ஆழ்வாரும் அவ்வாறே அருளினார். ஒருநாள் நகர்வலம் வந்த பல்லவ மன்னன், அவ்விளம் பெண்ணைக் கண்டு, அவள் அழகில் மயங்கி, அவளையே மணந்தான்.



ஆண்டுகள் பல கழிந்தன. மன்னனுக்கு மூப்பு நிலை வரத்துவங்கியது. ஆனாலும், அவன் மனைவி, அதே இளமை மாறா அழகுடன் இருந்தாள். இதைக்கண்டு அதிசயித்த பல்லவ மன்னன், அவளின் இளமையின் இரகசியத்தைக் கேட்டான். அவளும், திருமழிசையாழ்வாரின் பெருமையை எடுத்துக் கூறினாள்.



மறுநாள், மன்னன் தன் சேவகர்களை அனுப்பி திருமழிசையாழ்வாரை அழைத்து வரச்சொன்னார். அவர் வர மறுத்து விட்டார். மீண்டும், ஆட்களை அனுப்பினார். கனிகண்ணன், அங்கு சென்றார்.

மன்னன், கனி கண்ணனிடம், 'என்னைப் புகழ்ந்து உன் குரு பாட வேண்டும்', என்று கூறினார்.

ஆனால், கனி கண்ணனோ, 'எம் குருநாதர் எம்பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் பாட மாட்டார்', என்று கூறினார்.

சரி போனால் போகட்டும் விடு நீயாவது என்னைப் பற்றி பாடு என்று மன்னன் கனிகண்ணனிடம் ஆணையிட்டார்.

ஆனால் கனிகண்ணனோ பாட மறுத்தார். இதனால் கோபம் கொண்ட மன்னன், அவரை அந்த ஊரில் இருக்கக் கூடாது என்று கட்டளையிட்டார்.



கனிகண்ணன் விரைந்து திருமழிசையாழ்வாரிடம் வந்து, அரண்மனையில் நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறி, தான் திருவேக்காவை விட்டுப் புறப்படுவதாகவும். அதற்காகத் தன்னை மன்னித்து ஆசி அருள வேண்டும் என்று வேண்டினார், கனிகண்ணனார். திருமழிசையாழ்வார் தானும் உடன் வருவதாக கனி கண்ணனிடம் கூறி, உடன் புறப்பட்டார். புறப்படும் வேளையில், காஞ்சியில் வீற்றிருந்த எம்பெருமானை உடன் வருமாறு ஆணையிட்டார், ஆழ்வார்; நம் திருமழிசையாழ்வார். எப்படின்னு கேளுங்க!


"கனிகண்ணன் போகின்றான் காமரு பூங்காஞ்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப்பாய் சுருட்டிக் கொள்"

என்று பாடினார் திருமழிசையாழ்வார்.

அவர் சொன்னவுடன், எம் பெருமானும் அவர்களுடன் புறப்பட்டுப் போய்விட்டார். கமலக்கண்ணன் ஊரை விட்டுச் சென்றதால், காஞ்சி மாநகரம் தன் பொலிவை எல்லாம் இழந்து, ஒரே நாளில் நலிவுற்றுவிட்டது. மறுநாள் காலை, பணியாளன் ஒருவன் விரைந்து வந்து மன்னனிடம் நடந்தவற்றை எல்லாம் கூறினான். அனைத்தையும் அறிந்த மன்னன், தன் தவற்றை உணர்ந்து அவர்களைத் தேடிச் சென்று, அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு, அவர்களை மீண்டும் காஞ்சிக்கு வர வேண்டினான். அவர்களும், மன்னன் கூற்றுக்கு இசைந்து, காஞ்சிபுரம் செல்ல முடிவு செய்தனர். இப்பொழுது,

"கனிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் காஞ்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன்;
நீயும் உன்றன் பைந்நாகப் பாய்படுத்துக் கொள்"

என்று ஆழ்வார் கூற, மீண்டும் ஸ்ரீநிவாசன், காஞ்சியில் வாசம் செய்யத் துவங்கினான். பாத்தீங்களா! தம் பக்தர் என்ன சொன்னாலும் கேட்டுகிறாரு. அவரு ரொம்ப ரொம்ப நல்லவரு இல்லீங்களா!

நம்ம கனிகண்ணன், கமலக்கண்ணன், திருமழிசையாழ்வார் மூணு பேரும் ஓர் இரவு ஒரு இடத்துல தங்கியிருந்தாங்க இல்லயா? அந்த இடம்தான் 'ஓர் இரவு இருக்கை' அப்படின்னு அழைக்கப்படுகிறது. அந்தப் பெயர் மருவி தற்காலத்தில், 'ஓரிக்கை' ன்னு சொல்றாங்க.

அதன் பிறகு, சிறிது காலம் கழித்து திருமழிசையாழ்வாரும், கனிகண்ணனும் திருக்குடந்தை நோக்கிப் பயணித்தனர். அங்கே காவிரியாற்றில் அவர் பாடிய பாடல்களை இட்ட போது அனைத்தையும் காவிரித்தாய் எடுத்துக் கொண்டு திருச்சந்த விருத்தம் (120 பாசுரம்) மற்றும் நாண்முகன் திருவந்தாதி (90 பாசுரம்) ஆகிய இரண்டை மட்டும், திருமழிசையாழ்வாரின் பொற்பாதத்தில் சேர்ப்பித்தாள். அவர் அவற்றை எடுத்துக் கொண்டு ஆரவமுதப் பெருமாளிடத்தில் வந்து சேர்ந்தார். பின், திருக்குடந்தையிலேயே தங்கி எம்பெருமான் பெயரில் மங்களசாசனம் பாடினார்.

திருச்சந்த விருத்தத்தில் அவர் கூறுவது:

நின்றது எந்தை ஊரகத்து
இருந்தது எந்தை பாடகத்து
அன்று வாக்கனைக் கிடந்து
எண்ணிலாத முன்னெல்லாம்
அன்று நான் பிறந்திலேன்;
பிறந்த பின் மற்ந்திலேன்
நின்றதும் இருந்ததும்
கிடந்ததும் என்னெஞ்சினுள்ளே!

நீ வெவ்வேறு ஊர்களில், நின்று, இருந்து, கிடந்து என்னும் வெவ்வேறு கோலங்களில், கணக்கில்லாத யுகங்களாய் அருள் புரிந்துக் கொண்டிருக்கின்றாய்! அப்பொழுதெல்லாம், நான் பிறக்கவேயில்லை. நான் பிறந்த பின்பு உன்னை ஒருகாலத்திலும் மறந்ததேயில்லை. நான் இருக்கின்ற இக்காலத்தில், நீ நின்றது, இருந்தது, கிடந்தது எல்லாம் என் இதயத்தாமரைக்குள்ளேயன்றி வேறெங்குமில்லை! என்று பாடி பரவசமடைகிறார், திருமழிசையாழ்வார்.

ஓம் நமோ நாராயணாய நம!!
திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்!!

Friday, March 28, 2008

பொய்கையாழ்வார்; பூதத்தாழ்வார்; பேயாழ்வார்.

உங்களுக்கெல்லாம், ஒரே வருடத்துல, ஒரே மாதத்துல, ஒரே வாரத்துல செவ்வாய், புதன், வியாழன் என்னும் அடுத்தடுத்த மூன்று நாட்கள்ல அவதரித்த மூவேந்தர்கள பத்தி சொல்லட்டுமா?

மூவேந்தர்கள் -ன்னு நான் சொன்னது நம்ம சேரன், சோழன், பாண்டியன் இவங்கள இல்ல. நான் சொன்னது மூவுலகத்தையும் ஆளும் பிரானின் பிரியமான மூவரைப் பத்தி. அவங்க மூணு பேரும் யாரென்றால், அவங்கதான், நான் சொன்ன பன்னிரு ஆழ்வார்களில் முதல் மூவர். தெரிஞ்சுடுச்சா! அவங்களேதான்



1. பொய்கையாழ்வார்

2. பூதத்தாழ்வார்

3. பேயாழ்வார்.

இம்மூன்று பெரியவர்களும் அவதரித்த ஆண்டு - கி. பி. 460 - 540 (5 ம் நூற்றாண்டு)

பொய்கையாழ்வார்:

பொய்கையாழ்வாரின் அவதாரத் திருக்குறிப்புகள்:

ஊர் - காஞ்சி
ஆண்டு - சித்தார்த்த
மாதம் - ஐப்பசி
நட்சத்திரம் - திருவோணம் (ஷ்ரவணம்)
திதி - சுக்லாஷ்டமி(செவ்வாய்)

பொய்கையாழ்வார் பிறப்பு பற்றிய உண்மை அறியப்படவில்லை. தொண்டை நாட்டில், காஞ்சிபுரம் என்னும் திருமாநகரில் உள்ள திருவேக்கா என்னும் ஊரில் வீற்றிருக்கும் யதோத்தகிரி திருக்கோயிலின் தாமரைக் குளத்தில் தான் பொய்கையாழ்வார் முதன்முதலாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த நட்சத்திரக் குறிப்புகள் அனைத்தும் அவர் கண்டெடுக்கப்பட்ட நேரத்தைக் கொண்டு கணித்ததே. அக்குளத்தின் திருப்பெயர் பொய்கை எனப்படுவதால் இவர் பொய்கையாழ்வார் என்னும் திருப்பெயரிட்டு அழைக்கப்பெற்றார். இவர் எம்பெருமான் நாராயணின் பஞ்சாயுதங்களில் ஒன்றான திருசங்கின் அம்சமாவார்.

பூதத்தாழ்வார்:

ஊர் - மகாபலிபுரம்
ஆண்டு - சித்தார்த்த
மாதம் - ஐப்பசி
நட்சத்திரம் - அவிட்டம்(தனிஷ்டம்)
திதி - நவமி (புதன் கிழமை)

மகாபலிபுரம் - இத்திருத்தலத்தில் எம்பெருமான் நாராயணன் (கிடந்த வண்ணம்) சயனக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். (ஸ்தல ஸயன பெருமாள்)
பூதத்தாழ்வார் பெருமாளின் 5 ஆயுதங்களின் ஒன்றான கதையின்(கௌமோதகி) அம்சமாவார். இவருக்கான மலர் - குறுக்கத்தி(நீலோற்பல மலர்) ஆகும்.

அம்சம் ல்லாம் மென்மையா, மணமா, அழகாத்தான் இருக்கு; ஆனா பேர் மட்டும் ஏன் பூதம் ன்னு வெச்சி இருக்காங்க? அதாவது, பூதம் ன்னா, அது மாத்ரூ பூதமோ, இல்ல வேற ஆவிப் பூதமோ கிடையாது. பூதம் என்பது பஞ்சபூதங்களைக் குறிக்கிறது. அதாவது, அவர் எம்பெருமான் பஞ்ச பூதங்களாக இருக்கிறார் என்று நம்பி, அந்த நம்பியின் அம்சங்களனைத்தையும் கொண்ட பெயரையே தனக்கும் வைத்துக் கொண்டார்.

பஞ்ச பூதங்களாக இருக்கும் எம்பிரானைப் பற்றி பாடும் ஆழ்வார், அதனால் பூதம் + ஆழ்வார் = பூதத்தாழ்வார்.

பேயாழ்வார்

ஊர் - மயிலாப்பூர்
ஆண்டு - சித்தார்த்த
மாதம் - ஐப்பசி
நட்சத்திரம் - சதயம்
திதி - தசமி(வியாழன்)

பேயாழ்வார் பெருமாளின் 5 ஆயுதங்களில் ஒன்றான வாளின்(நாதங்கம்) அம்சமாவார். இவரும் மயிலாப்பூரில் உள்ள திரு ஆதி கேசவ பெருமாளின் திருத்தலத்தில் இருக்கும் திருக்கிணற்றில் மலர்ந்திருந்த செவ்வல்லி மலரிலிருந்து கண்டெடுக்கப்பட்டார்.

இவர் பெயர் ஏன் பேய் ஆழ்வார் என்று வந்தது என்று தெரியுமா? இவர், ஊர் ஊராக... எங்கும் எப்போதும் பெருமாளின் பெருமைகளையேப் பாடிக் கொண்டு பேயைப் போல் திரிந்து வந்ததால், அவருக்கு 'பேய் ஆழ்வார்' என்று பெயர் வந்தது.

இம்மூவரும் 'முதல் ஆழ்வார்கள்' என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களை நம்மாழ்வார், 'இன்கவி பாடும் பரம கவிகள்' என்று போற்றுகிறார்.

பொய்கையாழ்வார், தத்துவ ஞானத்திலிருந்து எவ்வாறு பர ஞானம் உருவாகிறது என்றும்,
பூதத்தாழ்வார், பர ஞானம் எவ்வாறு பர பக்தியாக மலர்கிறது என்றும்,
பேயாழ்வார், பரபக்தி எவ்வாறு பரம பக்தியாக நிறைகிறது என்றும் நிகழ்த்திக் காட்டினர். இவர்கள் மூவரின் பிரபந்தமும் ஒன்றாக இணைந்து 'இயற்பா' என்று அழைக்கப்படுகிறது.

இம்மூவரும் ஒரே ஆண்டில், அடுத்தடுத்த நாள்களில் பிறந்துள்ளனர். ஆனால் வேறு வேறு ஊர்களில் பிறந்த இவர்கள் எப்படி ஒத்த எண்ணமுடையவராய் இருந்தனர்? மூவரும் ஒன்றாக பள்ளியில் படித்தனரா? அதுதான் இல்லை. பின் எப்படி? இவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. ஆனால் இவர்கள் மூவரின் நோக்கமும், சிந்தையும் எம்பெருமானைப் பற்றியே இருந்தன. இவர்களை ஒன்றாக இணைத்து, ஓரிடத்தில் இருத்தி, அவர்களை இடித்து நெருக்கி அவர்களின் பக்தி பாசுரத்தை ஒரே இடத்திலேயே கேட்டு மகிழ்ந்த நம் பெருமானின் அருளுள்ளத்தை என்னவென்று சொல்ல! இம்மூன்று அன்புக்கடலையும் எம்பிரான் சங்கமிக்க வைத்த இடம் திருக்கோவிலூர் ஆகும்.

ஓம் நமோ நாராயணாய நம!!
பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்!!
பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்!!
பேயாழ்வார் திருவடிகளே சரணம்!!

ஆழ்வார்கள்

எம்பிரான் பெயரில் பூமாலையொடு பாமலையும் சூட்டி அழகுப் பார்த்து அதன் மூலம் வைணவம் உலகத்தில் தழைத்து நிற்கவும், அமுதத் தமிழ் மொழியின் பெருமையை உலகு உணரச்செய்யவும், மானுடனின் அகப்பிணிகள் நீங்கி, நாணிலத்தில் நல்வாழ்வு வாழ்ந்து பெருமாளின் பொற்பாதம் அடைய, ஆழ்வார்கள் என்னும் பன்னிரு அவதார புருஷர்கள் அருளிய பொக்கிஷமே நாலாயிரத்திவ்ய பிரபந்தம் என்னும் அமுதத் திரட்டு ஆகும்.

ஒரு வாய் அமுதம் உண்பவர்க்கே மரணம் என்பது இல்லையாயின், தொகுக்கப் பெற்ற நாலாயிரம் அமுத வெள்ளத்தை உண்பவர்க்கு என்ன ஆகும் என்று உரைக்கவும் வேண்டுமோ! ஒவ்வொருவரின் பிறவியின் நோக்கமே பிறவியின்மை என்னும் நிலையை அடைவதற்கான வழியை அறிவதே! அவ்வழியை இப்பொக்கிஷத்தில் நாம் கண்டறிய முடியும். தண்ணீர் பருகப் பருகத் தாகம் தீரும்; தமிழைப் பருகப் பருகத் தாகம் பெருகும். அறிவுத்தாகம், அருட்தாகம் இரண்டினுக்கும் தீர்வு இத்தீந்தமிழ் பாடல் தொகுப்பில் உள்ளது.

ஆயர்க் குல ஆதவனின் பேரருளைப் பெற நமக்குப் பேருதவியாய் இருந்த அந்த பன்னிரு ஆழ்வார்கள் என்னும் அவதார புருசர்களின் திருப்பெயர்கள் இதோ.

பொய்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசையாழ்வார்
நம்மாழ்வார்
மதுரகவியாழ்வார்
குலசேகரஆழ்வார்
பெரியாழ்வார்
ஆண்டாள்
தொண்டரடிப்பொடியாழ்வார்
திருப்பாணாழ்வார்
திருமங்கையாழ்வார் ஆவர்.

இவர்கள் திருமாலின் பெயரில் நெக்குருக, நெஞ்சுருகப் பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிரத்திவ்ய பிரபந்தம் ஆகும். ஆழ்வார்கள் அனைவரும் பாடியது அய்யன் பெருமாளின் பெயரில் மட்டுமே என்றாலும் அவை பாடப்பெற்ற காலங்கள் வேறு வேறு. வெவ்வேறு காலங்களில் இயற்றப்பெற்ற இப்பாசுரங்களைத் தொகுத்து நாலாயிரத் திவ்ய பிரபந்தம் என்னும் பெயரில் நமக்கு அருளியவர் நாதமுனி ஆவார். இப்பாசுரத்தை நூல் என்று சொல்வதை விட பாடல்களின் தொகுப்பு என்னும் சொல்லே சாலப் பொருந்தும்.

இந்து சமயத்தில் வைணவ மார்க்கத்தைப் பின்பற்றுவோர் நாலாயிரத் திவ்ய பிரபந்த பாடல் தொகுப்பை வேதத்திற்கு இணையாக மதிக்கின்றனர். அதனால் இது "வைணவ வேதம்" என்றும் அழைக்கப்படுகிறது. இப்பாடல்கள் அனைத்தும் இறைவனின் பெயரில் என்றால், அது எந்த ஊரில் வீற்றிருக்கும் இறைவனுக்கு என்று எண்ணுகிறீர்களா? இவை அனைத்தும் ஒரே தலத்தில் இருக்கும் தெய்வத்தைப் பற்றி பாடியவை அல்ல. ஆனால் ஒரே தெய்வத்தைப் பற்றியது. யார் தெரியுமா? நின்று, இருந்து, கிடந்து என்று எந்த நிலையிலும் நமக்கு அருள் பாலிக்கும் திருமாலின் 108 திவ்ய தேசங்களைப் பற்றி பாடப்பெற்றது.

முதலில் நாம் பன்னிரு ஆழ்வார்களைப் பற்றியும் சிறிது அறிந்து கொள்ளலாம் வாங்க.

ஓம் நமோ நாராயணாய நம!!
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்!!